கங்குலி தெரிவித்த யோசனை
டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கூட்டம் வரவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்ய கங்குலி தெரிவித்த யோசனையை செயல்படுத்த அணி சார்பாக ஒப்புக் கொண்டுள்ளார் கேப்டன் விராட் கோலி.
காலி மைதானம்
டெஸ்ட் போட்டிகளுக்கு சமீப காலமாக கூட்டம் வருவதில்லை. குறிப்பாக சமீபத்தில் நடந்த புனே மற்றும் ராஞ்சி டெஸ்ட் போட்டிகளில் இரண்டு மைதானங்களின் பெரும்பாலான இடங்களில் யாருமே இல்லாமல் காலியாக காட்சி அளித்தது.
கங்குலி வெற்றி
அந்த நேரத்தில் தான் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். அப்போது அவரிடம் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களை வர வைக்க, மைதானத்தை நிரப்ப என்ன திட்டம் உள்ளது என கேட்கப்பட்டது.
மைதானம் பராமரிப்பு
மைதானம் பராமரிப்பு இல்லாமல், ரசிகர்களுக்கு ஏற்ற வசதி இல்லாமல் இருப்பது தான் மக்கள் வராமல் இருக்க காரணமா? என்றும் கேட்கப்பட்டது. மைதானங்கள் வசதியாகவே உள்ளன. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் வேறு சில சிக்கல் இருப்பதால் தான் ரசிகர்கள் வருவதில்லை என்றார் கங்குலி.
கங்குலி சொன்ன யோசனை
டெஸ்ட் போட்டிகளை பகல் - இரவு போட்டிகளாக நடத்தினால் ரசிகர்கள் அதிகமாக வரக் கூடும் என்றார் பிசிசிஐ தலைவர் கங்குலி. எனினும், இந்தியா இதுவரை டெஸ்ட் போட்டிகளை பகல் - இரவு போட்டிகளாக நடத்த ஒப்புக் கொண்டதில்லை.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஒரே ஒரு பகல் - இரவு போட்டி ஆடுமாறு ஆஸ்திரேலியா கேட்ட போது பிசிசிஐ மறுத்து விட்டது. அப்போது சிலர் பிசிசிஐ முடிவை விமர்சித்தனர்.
அதிரடி
எனினும், கங்குலி தலைமையில் பிசிசிஐ இயங்கும் நிலையில், கங்குலி பகல் - இரவு போட்டிகள் நடத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது குறித்து வங்கதேச தொடருக்கான அணித் தேர்வின் போது நடந்த கூடத்தில் கேப்டன் கோலியிடம் பேசி இருக்கிறார் கங்குலி.
விராட் கோலி ஒப்புதல்
விராட் கோலி அணி சார்பாக பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டில் இந்தியா தன் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் கூட்டம்
இந்த திட்டம் சாத்தியமானால் ரசிகர்கள் மாலை நேரத்தில் டெஸ்ட் போட்டிகளை காண குவிவார்கள். அதனால், மைதானம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.