|
கோலிக்கு ஓவர் பில்டப்
அந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் "கோலி அதிகப் படியாக பில்டப் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன். தனிப்பட்ட முறையில் இவரது ஆட்டத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை. இந்த இந்தியரை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை ரசித்து பார்க்கிறேன்" என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் கருத்து கூறி இருந்தார்.
நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம்
அதை படித்துக் காட்டிய கோலி, "நீங்கள் இந்தியாவில் இருக்கத் தேவையில்லை. வேறு எங்கேயாவது போய் வாழலாமே. அது என்ன இந்தியாவில் இருந்து கொண்டு வேறு நாடுகளை பிடித்திருப்பது? உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை. ஆனால், நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு மற்றவற்றை பிடித்திருக்கிறது என கூறுவது சரியல்ல. உங்கள் விருப்பங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்" என கூறினார் கோலி.
கோலிக்கு கடும் எதிர்வினை
கோலியின் இந்த கருத்து கடும் எதிர்வினையை சந்தித்து வருகிறது. கோலி அவரை பிடிக்காத ஒரு ரசிகரை "இந்தியாவை விட்டு வெளியே போ" என கூறியுள்ளார் என ஒரு சாராரும், அந்த கிரிக்கெட் ரசிகர் இந்தியராக இருந்து கொண்டு மற்ற நாட்டு வீரர்களை ரசிப்பது தவறு எனக் கூறுகிறாரா கோலி? இப்படி சொல்வது சரிதானா? என மற்றொரு சாராரும் கோலியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
சரியான வாதம் தானா?
ஒரு கிரிக்கெட் ரசிகர் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டு கிரிக்கெட் வீரரையும் ரசிக்கலாம். இந்தியாவில் இருந்தால் இந்திய வீரர்களை தான் பிடித்திருக்க வேண்டும் என்பது சரியான வாதம் தானா? ஒருவேளை அந்த ரசிகர் இந்தியா ஆடும் போட்டிகளில் வேறு நாட்டை ஆதரித்தால் அவரை எதிர்த்து கருத்து கூறலாம். அப்போது கூட நாட்டை விட்டு வெளியேறு எனக் கூறுவது சரியா? அப்படிப் பார்த்தால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின், டிராவிட், சேவாக், தோனி மற்றும் இந்த விவகாரத்தை கிளப்பி இருக்கும் கோலி உட்பட பல பேருக்கு வெளிநாட்டில் எராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களா? கோலி கொஞ்சம் யோசித்து பேசுவது நல்லது.