இங்கிலாந்து: எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டை போட வைப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள். தனது ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொய் கூறுகிறார் என்று போட்டு வாங்குகிறார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் 2007க்குப் பிறகு இந்தியா டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. கடந்த 2014ல் நடந்த டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி 5 டெஸ்ட்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவருடைய டெஸ்ட் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்டங்களாக அந்த தொடர் அமைந்தது. 2016ல் இந்தியாவில் நடந்த தொடரில் 4-0 என இந்தியா வென்றது. அதில் கோஹ்லி 655 ரன்கள் எடுத்தார்.
இந்த முறை இங்கிலாந்தில் தொடரை வெல்வதுடன், அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதில் கோஹ்லி உறுதியாக உள்ளார். அதனால்தான் கவுன்டி அணிக்காக விளையாடவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியின்போது, என்னுடைய தனிப்பட்ட ஃபார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. நான் ரன் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன் என்று கோஹ்லி கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன், இந்திய கேப்டன் கோஹ்லி பொய் சொல்கிறார். தான் ரன் குவிப்பது குறித்து கவலைப்படவில்லை என்று கூறுகிறார். அது மிகப் பெரிய பொய் என்று ஆன்டர்சன் கூறியுள்ளார்.
கோஹ்லி ரன்கள் குவித்தால்தான், இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் அறிவோம் என்று ஆன்டர்சன் போட்டு வாங்கினார். 2014 தொடரின்போது, கோஹ்லி 6 முறை அவுட்டானார். அதில் நான்கு முறை ஆட்டமிழக்க செய்தவர் ஆன்டர்சன்.