17ம் தேதி துவக்கம்
தென்னாப்பிரிக்காவில் வரும் 17ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதிவரை அண்டர் -19 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 அண்டர்-19 உலக கோப்பை
இந்நிலையில் கடந்த 2008ல் தனது தலைமையில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தொடரை விராட் கோலி நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில் அந்த தொடர் மறக்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
மனதில் சிறப்பான இடம்
2008ல் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் மிக முக்கியமான தொடராக அமைந்ததை குறிப்பிட்ட விராட் கோலி, தன்னுடைய மனதில் அந்த தொடர் நீங்காத இடம் பிடித்துள்ளதாகவும் கூறினார்.
விராட் கோலி பாராட்டு
அந்த தொடரில் நியூசிலாந்திற்காக களமிறங்கிய கேன் வில்லியம்சன், தனது தனித்துவமான விளையாட்டை பதிவு செய்ததாக விராட் குறிப்பிட்டார். மற்ற வீரர்களிடமிருந்து அவரது ஆட்டம் வித்தியாசமானது என்றும் கூறினார்.
வெற்றி பெற்ற இந்தியா
அண்டர் -19 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், மழை குறுக்கிட்ட அந்த போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
237 ரன்களை குவித்த விராட்
அரையிறுதியில் 37 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சின் விக்கெட்டை விராட் கோலி எடுக்க, அதற்கு பழிதீர்க்கும் விதமாக, விராட்டின் கேட்சை வில்லியம்சன் பிடித்து அவர் வெளியேற காரணமாக இருந்தார். இந்த தொடரில் 237 ரன்களை விராட் கோலி குவித்திருந்தார்.
விராட் கோலி மகிழ்ச்சி
தற்போது கிரிக்கெட் உலகை கலக்கிவரும் ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோரும் அந்த போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையும் விராட் கோலி நினைவு கூர்ந்தார்.