கோலி குறைகளை மறுக்கிறாரா?
இந்நிலையில், போட்டிக்கு பின் பேசிய கோலி வழக்கம் போல, இந்திய அணியின் குறைகளை பற்றி பேசாமல், வெஸ்ட் இண்டீஸ் நன்றாக ஆடியதையும், இந்திய அணியின் நிறைகளை பற்றியும் பேசி இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின்னரும் கோலி இதே போல தான் பேசினார். இந்திய அணியின் குறைகளை பற்றி அப்போதும் பேசவில்லை.
கோலி சொன்னது என்ன?
கோலி, "இரண்டாவது இன்னிங்க்ஸில் (வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்) பிட்ச் வெகுவாக மாறி விட்டது. நாங்கள் 275-280 ரன்கள் தான் எடுப்போம் என நினைத்தோம். நான் அப்போது அடித்து ஆடி வந்ததால், அந்த அதிக ரன்கள் கிடைத்தது. எங்கள் முன் கடும் சவால் இருந்தது. நல்லவேளை போட்டி "டை" ஆகிவிட்டது. நாளின் முடிவில் அது தான் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்" என கூறினார்.
கோலி சொல்வது சரிதானா?
கோலி சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. அவர் இந்த பிட்ச் பேட்டிங்கிற்கானது என கூறி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், முதலில் இந்தியா ஆடும் போது 280 ரன்கள் எடுப்பதே கடினம் என்பது போலவும், கோலி போராடி 300க்கும் மேல் எடுத்துச் சென்றது போலவும் பேசி இருக்கிறார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆடும் போது அப்படியே இந்த பிட்ச் பேட்டிங் செய்ய எளிதாக மாறி விட்டது என்பது போலவும் கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் போராட்டம் இல்லை
உண்மையில், வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியது. இந்திய அணியில் போராட்டம் இல்லை. இந்திய அணியில் கூடுதல் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ஏன் இல்லை என்பது ரவி சாஸ்திரிக்கும், கோலிக்கும் தான் வெளிச்சம். சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு பல முக்கிய நேரங்களில் இந்தியா தடுமாறி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ அறிமுக வீரரை வைத்துக் கொண்டு பந்துவீச்சில் எப்படியோ சமாளித்து ஆடியது. அவர்களை கோலி பாராட்டி இருக்கிறார். ஆனால், இந்தியாவின் பலவீனத்தை ஒப்புக் கொள்ளவில்லை. எப்படியும் அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு பும்ரா, புவனேஸ்வர் குமாரை அணியில் சேர்த்து தொடரை வென்று விடுவார்கள். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்தியா இன்னும் நிலையான அணியாக மாறவில்லை என்பதை தான் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கு காரணம், ரவி சாஸ்திரியும், கோலியும் தான்.