கிருஷ்மார் சன்டோகி
வங்கதேச பிரீமியர் லீக் தொடர் புதன்கிழமை அன்று துவங்கியது. சில்ஹெட் தண்டர்ஸ் - சட்டோக்ரம் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி அன்று நடைபெற்றது. சில்ஹெட் தண்டர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிருஷ்மார் சன்டோகி களமிறங்கினார்.
லெக் திசையில் வைடு
வேகப் பந்துவீச்சாளரான சன்டோகி தான் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தை லெக் திசையில் வீசினார். அவர் வீசிய முறையை வைத்தே அவர் வேண்டும் என்றே பந்து லெக் திசையில் வைடாக செல்ல வேண்டும் என வீசியதை போன்றே இருந்தது.
நழுவி இருக்கலாம்
அதே போல, பந்து மிகப் பெரிய வைடாக அமைந்தது. அப்போது யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை. பந்து ஒருவேளை கையில் இருந்து நழுவிச் சென்று இருக்கலாம் என்று தான் பலரும் எண்ணினர்.
இரண்டு அடி தூர நோபால்
அடுத்து இரண்டு பந்துகள் கழித்து கிரீஸில் இருந்து சுமார் இரண்டு அடி தூரம் வரை காலை தாண்டி வைத்து ஒரு மோசமான நோ பால் வீசினார் சன்டோகி.
|
டகால்டி
அப்போது தான் இவர் ஏதோ "டகால்டி" வேலை செய்கிறார் என சந்தேகம் எழுந்தது. ரசிகர்கள் உடனடியாக அவர் வீசிய வைடு மற்றும் நோ-பாலை ஆய்வு செய்து இவர் ஸ்பாட் பிக்ஸிங் செய்து இருக்கலாம் என இணையத்தில் புகார் கூறத் துவங்கினார்கள்.
அணி இயக்குனர் புகார்
இந்த நிலையில் தான் அவர் சார்ந்த அணியின் இயக்குனர் டாஞ்சில் சவுத்ரி அதிர வைக்கும் புகார் ஒன்றை கூறி இருக்கிறார். இந்த ஆண்டு முதல் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அந்த அணியின் இயக்குனரே வீரர் பற்றிய புகாரை கூறி இருக்கிறார்.
புகாரை அளித்து விட்டேன்
சவுத்ரி கூறுகையில், அந்த நோ-பால் மிகவும் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்தது. வங்கதேச கிரிக்கெட் போர்டு சன்டோகியை இதுவரை விசாரிக்கவில்லை. எனினும், நான் என் புகாரை அளித்து விட்டேன் என்றார்.
விளம்பரதாரர்கள் வற்புறுத்தல்
மேலும், தொடருக்கான அணித் தேர்வின் போது சில வீரர்களை அணியில் சேர்க்குமாறு விளம்பரதாரர்கள் எங்களை மீறி வற்புறுத்தினார்கள் என்று அணி இயக்குனர் சவுத்ரி கூறியது அதிர வைக்கும் தகவலாக இருந்தது.
சன்டோகி தேர்வு
சில்ஹெட் அணியின் இயக்குனர்கள் சில வீரர்களை தேர்வு செய்ய நினைத்ததாகவும், முக்கிய விளம்பரதாரர் சொஹாக் காஸி மற்றும் சன்டோகியை தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
மர்மம் விலகுமா?
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் பெரிய தொடராக வளர்ந்து வந்த நிலையில், ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் பெரிய அளவில் சிக்கி இருக்கிறது. சன்டோகி விஷயத்தில் மர்மம் விலகுமா?