ஜேக்கப் மார்ட்டின் யார்?
1999ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனவர் ஜேக்கப் மார்ட்டின். இவர் கங்குலியின் தலைமையில் அறிமுகமாகி ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பின்னர் சச்சின் தலைமையில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடினார்.
வாகன விபத்து
இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முதல் தர போட்டிகளில் 2009ஆம் ஆண்டு வரை ஆடி வந்தார் ஜேக்கப் மார்ட்டின். இவர்கடந்த டிசம்பர் 28 அன்று வாகன விபத்தில் சிக்கி நுரையீரல் மற்றும் கல்லீரலில் கடுமையான பாதிப்பு அடைந்து உயிருக்கு போராடி வருகிறார் மார்ட்டின்.
உதவி வேண்டும்
மார்ட்டின்-இன் மனைவி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டார். பிசிசிஐ 5 லட்சம் வழங்க ஒப்பதல் அளித்துள்ளது. பரோடா கிரிக்கெட் அமைப்பு 3 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. பல முன்னாள் வீரர்களும் மார்ட்டினுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
முன்னாள் வீரர்கள் உதவி
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் கங்குலி, ஜாகிர் கான், இர்பான் பதான், முனாப் பட்டேல் உள்ளிட்டோர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்நிலையில், இளம் வீரர் க்ருனால் பண்டியா மார்ட்டினுக்கு உதவியுள்ளார்.
க்ருனால் பண்டியா அதிரடி உதவி
க்ருனால் பண்டியா பணம் குறிப்பிடாமல் செக் வழங்கியுள்ளார். அதில் குறைந்த பட்சம் 1 லட்சம் முதல் தேவையான பணத்தை நிரப்பி பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார் க்ருனால் பண்டியா.
நெகிழ வைத்த உதவி
க்ருனால் பண்டியா சில மாதங்கள் முன்பு தான் இந்திய அணியில் இணைந்தார். ஐபிஎல் தொடரில் சில சீசன்களாக ஆடி வருகிறார். மிகவும் இளம் வீரரான அவர் அதிரடியாக உதவி உள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ஹர்திக் பண்டியா சர்ச்சை
க்ருனால் பண்டியாவின் சகோதரர் ஹர்திக் பண்டியா பொது வெளியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தற்போது இடை நீக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.