வீட்டில் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளும் அதையடுத்து வீரர்களும் முடங்கியுள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக வீட்டில் தங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். ஆயினும் பிட்னஸ் பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபரில் ஐபிஎல்?
இதனிடையே, கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த தொடர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அட்டவணையில் நடத்தப்படவுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்தாகும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்
இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடர் 2020 நடத்தப்படலாம் என்று தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ள பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள தனது அணி வீரர்களுக்கு மைதானங்களில் பயிற்சிகளை அறிவித்துள்ளது.
க்ருணால் பாண்டியா பயிற்சி
முன்னதாக கடந்த மாதத்தில் முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை ஆரம்பித்தார். இதையடுத்து சத்தீஸ்வர் புஜாரா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களும் தங்களின் பயிற்சியை மைதானத்தில் துவக்கி, தங்களது உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும் ஆல்-ரவுண்டருமான க்ருணால் பாண்டியாவும் மைதானத்தில் பயிற்சியை துவக்கி தான் பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.