மோசமான ஃபினிஷிங்
பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ப்ரித்வி ஷா - தவான் ஜோடி அபாரமாக விளையாடி, முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. ஆனால், அதன் பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சொதப்பலாக விளையாட, டெல்லி 164 ரன்களே எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பெங்களூரு அணி, 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கோலி 4 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் பூஜ்யத்திலும் அவுட்டானார்கள்.
தனி முத்திரை
இதன் பிறகு டி வில்லியர்ஸ் 26 ரன்களில் அவுட்டானாலும், ஸ்ரீகர் பரத் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு போட்டியிலும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பரத், இப்போட்டியில் தனி முத்திரையை பதித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் அடித்து அசத்திய தொடர்ந்து டெல்லி பவுலர்களை சோதித்து வந்தார்.
சிரித்துக் கொண்டிருந்த அக்ஷர்
சிறப்பான ஃபார்மில் இருந்த க்ளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் தனது ஃபார்மை கன்டினியூ செய்தார். ஆனால், கடைசி நேரத்தில், அதாவது 19வது ஓவரை வீசிய நோர்க்யா வெறும் 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இதில், கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதே, டெல்லி வீரர்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, 4வது பந்தை, பரத் அடிக்காமல் விட்ட போது, பந்துவீசிய ஆவேஷ் கான் சிரித்தேவிட்டார். அதன் பிறகு, 5வது பந்தில் சொதப்பல் ஃபீல்டிங் செய்த அக்ஷர் படேல், 1 ரன் மட்டும் கொடுத்திருக்க வேண்டிய இடத்தில், மோசமான ஃபீல்டிங்கால் 2 ரன்கள் எடுக்க அனுமதித்தார். அதற்காக அவர் வருத்தப்படவில்லை. மாறாக, அக்ஷர் சிரித்துக் கொண்டிருந்தார்.
கடைசி பந்தில் சிக்ஸ்
கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆவேஷ் கான் வைட் வீச, வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் எனும் நிலை ஏற்பட்டது. இதனால் பதட்டத்தில் ஆவேஷ் கான் ஃபுல் டாஸ் வீச, அதனை பரத் ஸ்டிரெய்ட்டில் தூக்கி அபார சிக்ஸ் அடிக்க, த்ரில் வெற்றிப் பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 52 பந்துகளை சந்தித்த பரத், 78 ரன்கள் விளாசினார். இதில், 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். எனினும், இந்த வெற்றித் தோல்வி இரு அணிகளையும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. டெல்லி அணி முதலிடத்தில் நீடிக்க, பெங்களூரு அதே மூன்றாம் இடத்தில் நீடித்தது.
வெளியேறிய மும்பை
அதேபோல், மும்பை - ஹைதராபாத் அணிகள் விளையாடிய மற்றொரு போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 235 ரன்கள் குவிக்க, சேஸிங் செய்த ஹைதராபாத், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 எடுத்தது. கேப்டன் மனீஷ் பாண்டே 41 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால், மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. எனினும், மும்பை அணி 14 புள்ளிகள் பெற்றாலும், பிளே ஆஃப் தகுதிப் பெற முடியவில்லை. தொடர்ந்து இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, ஐபிஎல் 2021 தொடரில் பிளே ஆஃப் முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.