கார்டிப்: முதல் டி20 போட்டியில், குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார், சில முறை பந்து வீசுவது போல ஓடி வந்தும், பந்து வீசவில்லை. இது பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டி அவர்கள் செய்யும் தந்திரம் என தான் கருதுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி கூறியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா, இடையில் நடந்த முதல் டி20 போட்டியின் போது, இந்தியாவின் குல்தீப் யாதவ், தன் நான்கு ஓவர் பந்து வீச்சில், மூன்று முறை பந்து வீச ஓடி வந்து, பின் வீசாமல் திரும்பினார்.
குல்தீப், ஜோஸ் பட்லருக்கு வீசிய ஒரே ஓவரில் இரண்டு முறை இது போல, ஓடி வந்து பந்து வீசாமல் செல்ல, அது குறித்து அம்பயரிடம் புகார் தெரிவித்தார் பட்லர். அதே செயலை, கடைசி ஓவரில் புவனேஸ்வர் குமார் செய்தார். அப்போது, பந்தை சந்திக்கவிருந்த டேவிட் வில்லி, கோபமடைந்து அவருடன் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கூறிய டேவிட் வில்லி, "நான் இதை ஊகத்தின் அடிப்படையில் சொல்கிறேன். அவர் (புவனேஸ்வர்) நான் என்ன செய்யப் போகிறேன் என பார்த்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் சில முறை இதை செய்தார்கள். இது தொடர்பான விதிகள் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இது சிறப்பான விஷயமாக எனக்குப் படவில்லை. கிரிக்கெட்டின் மாண்புக்கு இது உகந்ததாகவும் எனக்கு தோன்றவில்லை" என்றார்.
பொதுவாக ஒரு பௌலர் ஓடி வரும் போது, கண் அருகே பூச்சி பறந்தலோ, அல்லது தன் பக்கம் நிற்கும் பேட்ஸ்மன் அதிக தூரம் முன்னேறி சென்றாலோ, பந்தை சந்திக்கும் வீரர் பந்து வீசும் முன்பே தான் நின்ற நிலையை மாற்றிக் கொண்டாலோ பந்த வீசாமல் திரும்பி செல்வது வழக்கம். ஆனால், ஜோஸ் பட்லர் ஒரே நிலையில் நின்று கொண்டு இருந்த போது, இரண்டு முறை, குல்தீப் ஓடி வந்து பந்து வீசாதது ஏன்? என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைக்குப் பின், ஐசிசி விதிகள் பற்றி வரும் தகவல்களின்படி, சரியான காரணம் இன்றி ஒரு பௌலர் பந்து வீசுவதை நிறுத்தினால், எதிரணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குல்தீப்பின் சுழலை சமாளிக்க இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் மெர்லின் என்கிற சுழல் பந்து வீசும் ஒரு இயந்திரத்தை கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
ஒரு வேளை, இரண்டாவது போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள், பந்து வீச ஓடி வந்து வீசாமல் போனால், நமக்கு ஒரு என்டர்டைன்மென்ட் காத்துகிட்டு இருக்கு.