வாய்ப்பே இல்லை
குல்தீப் யாதவிற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. குல்தீப் தொடக்க காலத்தில் 60 - 70 கிமீ வேகத்தில் மெதுவாக பந்துவீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி அடுத்தடுத்து விக்கெட்கள் விழும். ஆனால் காலப்போக்கில் அதனை சுதாரித்துக்கொண்ட பேட்ஸ்மேன்கள் அவரின் பந்துக்காக பொறுத்திருந்து துவம்சம் செய்தனர்.
ஏமாற்றம்
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்கேற்ற குல்தீப் யாதவிற்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை. சென்னை மைனாதாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். ஆனால் இதில்கூட குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பல போட்டிகளில் குல்தீப் யாதவ் பங்கேற்றிருந்துள்ளார். ஆனால் இறுதிப்போட்டியிலும் வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
மன வருத்தம்
இதுகுறித்து பேசியுள்ள குல்தீப் யாதவ், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நான் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் அங்கு சென்று இந்திய அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என ஆசைப்பட்டேன். எனினும் நான் அடுத்த வாய்ப்புக்காக தயாராகி வருகிறேன். கடந்த 2 - 3 ஆண்டுகளாக இந்திய அணியின் கிரிக்கெட் மிகவும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. எனவே நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன்.
சிறப்பான பங்காற்றுவேன்.
நான் இங்கிலாந்து தொடருக்கு செல்லாததால் இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதில் சிறப்பான பங்கை கொடுப்பேன். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. அனைவரும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். ஆனால் சில நேரங்களில் அதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.