வாய்ப்பே இல்லை
குல்தீப் யாதவிற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
ஏமாற்றம்
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்கேற்ற குல்தீப் யாதவிற்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை. சென்னை மைனாதாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். ஆனால் இதில்கூட குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
கவலை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள குல்தீப், நான் தோனியையும் அவரது அனுபவத்தையும் மிஸ் செய்கிறேன். தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நின்று கொண்டு நிறைய யோசனைகளை வழங்குவார். தற்போது ரிஷப் பண்ட் உள்ளார். எனினும் அவர் தன் துவக்க நிலையில் உள்ளார். அவர் எதிர்காலத்தில் ஸ்டம்புக்கு பின்னாலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் மறுமுனையில் ஒரு சரியான ஜோடி தேவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
தோனி போனதில் இருந்துதான்
தோனி அணியில் இருந்தபோது நானும் சாஹலும் ஒன்றாக விளையாடினோம். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து நானும் சாஹலும் ஒன்றாக விளையாடவில்லை. தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நான் மிக சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். நானும் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்தேன். நான் நன்றாக தான் ஆடியிருக்கிறேன். சில நேரங்களில் ஒருவர் என் பந்துவீச்சை நொறுக்கினால், அதன் பிறகு எனது பவுலிங் சரியாக இல்லாதது போன்று தெரியும் என தெரிவித்துள்ளார்.