வாய்ப்பே இல்லை
கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது, ஸ்பின்னிங்கிற்கு முதல் தேர்வாக இருந்த குல்தீப் யாதவிற்கு, கடந்த இரண்டு வருடங்களாகவே கொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடிய நிலையில், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று. ஆனால் இதில்கூட குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
குல்தீப் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள குல்தீப், இந்திய அணிக்காகவே விளையாடிய எனக்கு உள்நாட்டு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அநீதி, அதற்காக வருத்தப்பட முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. கடும் முயற்சி செய்யலாம், அணி நிர்வாகத்திடம் சரியான காரணம் கேட்கலாம். அதற்கு அவர்கள் பதில் தருவார்கள். ஆனால் கொல்கத்தா அணியில் எந்த விளக்கமும் எனக்கு கொடுக்கப்படவில்லை. ஒருவேளை கவுதம் கம்பீர் என் மீது வைத்த நம்பிக்கை, தற்போது இருக்கும் அணி என் மீது வைக்கவில்லை எனக்கூறலாம்.
கே.கே.ஆர். சொதப்பல்
கொல்கத்தா அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியுள்ள குல்தீப், சர்வதேச போட்டியை பார்த்தால், விராட் கோலிக்கு எப்படியாவது சிறப்பாக ஆட வேண்டும், வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதே எண்ணம் தான் கவுதம் கம்பீருக்கும் இருந்தது. ஆனால் தற்போதுள்ள கொல்கத்தா அணியில் அந்த எண்ணம் இல்லை என நினைக்கிறேன். தோற்றால் என்ன நடக்கும் என்ற வகையிலேயே அவர்கள் யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று குல்தீப் கூறியுள்ளார்.
சர்வதேச வாய்ப்பு
ஐபிஎல் தொடரை போலவே இந்திய அணியிலும் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் அவர் சொதப்பியதால், அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.