டெல்லி: கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, மைதானத்தில் எடுக்கும் முடிவுகள் எப்பவும் தீர்க்கமாக இருக்கும் என்பது உலகுக்கே தெரியும். அதற்கு மற்றொரு உதாரணமாக, மைதானத்தில் நடந்த ஒரு சுவாரசியமான, தோனியை கோவப்பட வைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
இளம் இந்திய சின்னமன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தங்களுடைய வெற்றிக்கு முக்கியக் காரணமாக, விக்கெட்டுக்கு பின்னால் நிற்கும் தோனியைத்தான் கைகாட்டி வருகின்றனர்.
ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற குல்தீப் யாதவ், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தோனி குறித்த கேள்விக்கு மட்டும் நீண்ட நேரம் பதிலளித்தார். அதன் சுருக்கம் இதுதான். ஓவர் டு குல்தீப் சிங்:
எங்களுடைய பாதி வேலையை தோனியே செய்து விடுவார். எங்கு யாரை பீல்டிங்கில் நிறுத்த வேண்டும் என்று சரியாக யூகித்து, அதற்கேற்ப எங்களை பந்து வீச சொல்வார்.
இலங்கைக்கு எதிரான ஒரு டி-20 போட்டி. நாம் 260 ரன்கள் எடுத்தோம். அதைவிட வேகமாக இலங்கை ரன் குவித்து வந்தது. அப்போது தோனி சில அறிவுரைகளை கூறினார்.
ஒரு கட்டத்தில் பீல்டிங்களை மாற்றி அமைக்கும்படி கூறினார். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. அப்போது அவருக்கு கடும் கோவம் வந்தது.
என்னை என்ன பைத்தியக்காரன் என்று நினைச்சியா. நான் 300 போட்டிகளில் விளையாடியுள்ளேன் என்று தோனி கூறினார். அதன்படியே பீல்டிங்கை மாற்றி அமைத்தேன். உடனே விக்கெட் கிடைத்தது. நமது அணியும் வெற்றி பெற்றது.
புரிஞ்சுதா, இதைத் தான் நான் சொன்னேன் என்று பிறகு கூலாக கூறினார். தோனி தோனிதான். மைதானத்தின் தன்மை, வீரர்களின் மனநிலை, யாருக்கு எப்படி பந்து வீச வேண்டும், எங்கு பீல்டிங்கை நிறுத்த வேண்டும் என்பதை சரியாக கணிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான்.
இதுதான் குல்தீப் யாதவ் கூறியதன் சுருக்கம். இதுவே ஐந்து பாரா வந்துவிட்டது. அப்படியென்றால், தோனியை அவர் எப்படி புகழந்திருப்பார் என்பதை யூகித்து கொள்ளுங்கள்.