4வது போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டி பிரிஸ்பேனில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக ஷமி, பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்காத நிலையில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்ளிட்ட பௌலர்கள் தங்களது முதல் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய யாதவ்
இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2019ல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் பெற்றவர் குல்தீப் யாதவ். அதைதொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் எதிலும் அவர் விளையாடவில்லை. தற்போதைய தொடரில் ஒருநாள் போட்டி மற்றும் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடியுள்ளார்.
ரவி சாஸ்திரி பாராட்டு
கடந்த 2019 டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் குல்தீப் யாதவ். அப்போது கோச் ரவி சாஸ்திரி இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னராக குல்தீப் மாறியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
குல்தீப் ஏமாற்றம் அடைந்திருப்பார்
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது தனக்கு மிகுந்த வியப்பை அளிப்பதாக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் குல்தீப் சேர்க்கப்படாதது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.