லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் அனில் கும்ப்ளேவே 2019ம் ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று லண்டனில் இந்தக் குழு கூடி தலைமைப் பயிற்சியாளர் குறித்து ஆலோசனை நடத்தியது அப்போது கும்ப்ளேவே இப்போதைக்கு தலைமைப் பயிற்சியாளர் பதவியில் நீடிக்கலாம் என்ற முடிவுக்கு மூன்று பேரும் வந்ததாக கூறப்படுகிறது.
கும்ப்ளேவை மாற்றுமாறு கேப்டன் விராத் கோஹ்லி ஒற்றைக் காலில் நிற்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கிரிக்கெட் வாரியமும் கூட மாற்றும் யோசனைக்குப் போனதாக கூறப்பட்டது. இருப்பினும் கேப்டன் சொல்லி பயிற்சியாளரை மாற்றினால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் கிரிக்கெட் வாரியமும் யோசிக்கிறது.
மேலும் ராஜீவ் சுக்லா போன்ற முக்கிய பிசிசிஐ புள்ளிகள் கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளனர். 3 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டியும் கும்ப்ளேவுக்கு எதிராக இல்லை. எனவே இப்போதைக்கு கும்ப்ளே நீக்கப்பட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டி வரை கும்ப்ளே பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.