பஞ்சாப் அணி தோல்விகள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2018 ஐபிஎல் தொடரில் அஸ்வினை கேப்டனாக நியமித்து ஐபிஎல் அரங்கில் புதுமை படைத்தது. மற்ற அணிகள் சர்வதேச அரங்கில் சாதித்த கேப்டன்களை தங்கள் அணிக்கு கேப்டனாக நியமித்த நிலையில், கேப்டனாக அனுபவம் இல்லாத அஸ்வினை நியமித்தது பஞ்சாப்.
பயிற்சியாளர் நீக்கம்
ஆனால், 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பிளே - ஆஃப் செல்லவில்லை. அதனால், வெறுப்பில் இருந்த பஞ்சாப் அணி நிர்வாகம் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மைக் ஹெஸ்ஸனை நீக்கியது.
அஸ்வின் நிலை
அடுத்து கேப்டன் பதவியில் இருந்த அஸ்வினை கேப்டன் பதவியில் இருந்து அந்த அணி நீக்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்பதால், வேறு அணிக்கு விற்க அந்த அணி முடிவு செய்தது.
கங்குலி ஆர்வம்
இதை அறிந்த கங்குலி, தான் ஆலோசகராக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அஸ்வினை தூக்கி வர யோசனை கூறினார். பேட்டிகளில் கூட அப்போது அஸ்வின் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார் கங்குலி.
டெல்லி கேபிடல்ஸ் ஒப்பந்தம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அப்போது அஸ்வினை வாங்க முயற்சி செய்தது. எனினும், டெல்லி கேபிடல்ஸ் பேச்சுவாரத்தை முடிந்து ஒப்பந்தம் கூட தயார் செய்து விட்டது என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது.
உள்ளே வந்த அனில் கும்ப்ளே
இந்த நடைமுறைகள் நடந்து வந்த அதே நேரம், அடுத்த பயிற்சியாளரை நியமிக்க பஞ்சாப் அணி முயற்சித்து வந்தது. தற்போது ஐபிஎல் அணிகள் அனைத்துமே வெளிநாட்டு பயிற்சியாளர்களையே நியமித்துள்ள நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை நியமிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் பஞ்சாப் அணி உரிமையாளர்கள்.
மாறிய காட்சிகள்
அப்போதே அஸ்வின் அணி மாற்றம் நடப்பதில் பண விவகாரம் காரணமாக சிக்கல் என பேச்சு கிளம்பியது. அடுத்து அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்ட பின் அவரே அஸ்வின் குறித்து முடிவு செய்வார் என்றும் ஒரு தகவல் வலம் வந்தது.
அஸ்வின் நீக்கம் இல்லை
இந்த நிலையில், அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு செல்லவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது. பஞ்சாப் அணியின் ஒரு உரிமையாளர் நெஸ் வாடியா அளித்த பேட்டியில், "பஞ்சாப் அணி போர்டு மீண்டும் சிந்தித்து, அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் என உணர்ந்துள்ளோம்" என்று கூறி இருக்கிறார்.
அனில் கும்ப்ளே தான் காரணம்
பஞ்சாப் அணி இந்த முடிவுக்கு வர அனில் கும்ப்ளே தான் மறைமுக காரணம் என கூறப்படுகிறது. முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த அனில் கும்ப்ளே, அஸ்வினின் சுழற் பந்துவீச்சு முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி இருப்பார்.
கங்குலியின் ஆர்வம்
மேலும், கங்குலி போன்ற ஒரு முன்னாள் கேப்டன், அஸ்வின் நம் அணிக்கு வேண்டும் என கூறுவதில் இருந்தும், ராஜஸ்தான் அணியும் அவரை வாங்க முயற்சி செய்ததில் இருந்தும் அவரின் முக்கியத்துவம் என்ன என்பதை பஞ்சாப் அணி புரிந்து கொண்டிருக்கும்.
விக்கெட் வேட்டை
இந்த விவகாரம் நடந்து வந்த அதே சமயம், அஸ்வின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தினார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதுவும் பஞ்சாப் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.