ஐபிஎல் 2019 முடிவு
2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆறாம் இடம் மட்டுமே பிடித்தது. 2018 ஐபிஎல் தொடரில் எட்டாம் இடம் பிடித்தது. இந்த இரண்டு தொடரிலும் அஸ்வின் தலைமையில் ஆடிய பஞ்சாப் அணி முதல் பாதியில் சிறப்பாக ஆடினாலும், இரண்டாம் பாதியில் சொதப்பி, பிளே-ஆஃப் வாய்ப்பு இழந்து இருந்தது.
மாற்றம் வேண்டும்
அதனால், பஞ்சாப் அணி அணியில் மாற்றம் செய்ய முடிவு செய்தது. வீரர்களை மாற்ற தேவையில்லை என்று நினைத்த அந்த அணி பயிற்சியாளர் மற்றும் கேப்டனை நீக்க முடிவு செய்தது. பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் நீக்கப்பட்டார்.
நீக்க முடியாது
கேப்டன் அஸ்வினை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினாலும், ஐபிஎல் விதிப் படி அணியில் இருந்து நீக்க முடியாது. ஒன்று அவருக்கு களமிறங்க வாய்பளிக்காமல் வைத்துக் கொள்ளலாம். அல்லது வேறு அணிக்கு விற்று விடலாம்.
அணி மாற்ற செய்தி
இந்த நிலையில், அஸ்வினை பஞ்சாப் அணி விற்க உள்ளதாக தகவல் கிடைத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை பணம் கொடுத்து வாங்க பேசி விட்டதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் எனவும் கூறப்பட்டது.
பண விவகாரம்
அதே சமயம், அஸ்வின் அணி மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு காரணம், அணி மாற்றம் செய்யும் போது கிடைக்கும் கூடுதல் பண விவகாரத்தில் அஸ்வின் - பஞ்சாப் அணி இடையே சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என கூறப்பட்டது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பதும் தெரியாத நிலை இருந்தது.
அனில் கும்ப்ளே வருகை
இதனிடையே, புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமித்தது பஞ்சாப் அணி. அனில் கும்ப்ளே, அஸ்வினை அணியை விட்டு நீக்க வேண்டாம் என அணி உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் இருந்தது.
பஞ்சாப் அணி மறுப்பு
அப்போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் எனக் கூறி, அணி மாற்றம் என்ற செய்தியே தவறு என்பது போல கூறி ஆச்சரியம் அளித்தார்.
பேசப்பட்ட பேரம்
ஆனால், இதன் பின்னணியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடந்த பேரம் இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வினை அணி மாற்றம் செய்ய பணத்திற்கு பதில், இரண்டு வீரர்களை கேட்டுள்ளது பஞ்சாப் அணி.
டெல்லி கேபிடல்ஸ் ஒப்புதல்
முதலில் அந்த பேரத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனால், அஸ்வினை விற்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய பஞ்சாப், தற்போது டெல்லி அணி அந்த இரு வீரர்களை கொடுக்க ஒப்புக் கொண்டதால், அஸ்வினை அணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது.
விரைவில் அறிவிப்பு
இந்த அணி மாற்றம் 2020 ஐபிஎல் தொடரின் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அஸ்வின் போன்ற அனுபவ வீரரை வேறு அணிக்கு அளிப்பது பஞ்சாப் அணிக்கு பாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.