அஸ்வினை நீக்க முடிவு
2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வினை நீக்க முடிவு செய்தது பஞ்சாப் அணி நிர்வாகம். அந்த அணி அந்த இரண்டு தொடர்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதே முக்கிய காரணம்.
விலை பேசிய இரு அணிகள்
அஸ்வினை அணி மாற்றம் செய்ய பஞ்சாப் அணி விருப்பம் தெரிவித்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அவர வாங்க முயற்சி செய்ததாக அப்போது செய்திகள் வெளியாகின.
டெல்லி கேபிடல்ஸ் முன்னிலை
டெல்லி கேபிடல்ஸ் அணியின் அப்போதைய ஆலோசகர் கங்குலி அது குறித்து மறைமுகமாக கூறி இருந்தார். டெல்லி அணி அஸ்வினை வாங்குவதில் முன்னிலையில் இருந்தது. ஒப்பந்தம் போடுவது வரை இரு அணிகளும் சென்று விட்டதாக கூறப்பட்டது.
பண விவகாரம்
எனினும், இடையே பெரிய தாமதம் ஏற்பட்டது. அஸ்வின் அணி மாற்றத்தில் பங்கு கேட்பதாக ஒரு தகவல் வந்தது. அது உண்மையா? அது தான் தாமதத்துக்கு காரணமா? என்ற குழப்பம் நீடித்தது.
அனில் கும்ப்ளே வந்தார்
இதனிடையே அனில் கும்ப்ளே பஞ்சாப் அணி பயிற்சியாளராக வந்ததால், அவர் அஸ்வினை அணியில் வைத்திருக்குமாறு கூறியதாக ஒரு தகவல் வலம் வந்தது.
பஞ்சாப் அணி குழப்பம்
அது உண்மை தான் என்பது போல, பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா, அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் என பேட்டி கொடுத்தார். அதனால், பஞ்சாப் அணி அஸ்வினை அணி மாற்றி விடுவதில் குழப்பத்தில் இருப்பது தெரிந்தது.
நெருங்கிய கடைசி நாள்
ஐபிஎல் அணிகள் தங்களுக்குள் வீரர்களை அணி மாற்றம் செய்து கொள்ள நவம்பர் 14 தான் கடைசி நாள் என்பதால், கடந்த சில நாட்களாக மீண்டும் அஸ்வின் அணி மாற்றம் பற்றிய பேச்சு துவங்கியது.
மூன்று அணிகளிடம் பேரம்
இந்த முறை, பஞ்சாப் அணி மூன்று அணிகளிடம் பேரம் பேசி வருவதாக கூறினார் உரிமையாளர் நெஸ் வாடியா. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணி தான் முன்னிலையில் இருந்தது.
இறங்கி வந்த பஞ்சாப்
பஞ்சாப் அணி அஸ்வினை அணி மாற்றம் செய்ய இரு வீரர்களை டெல்லி அணியில் இருந்து கேட்டு இருந்தது. அதற்கு டெல்லி அணி ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடைசி நாள் நெருங்குவதால், இறங்கி வந்த பஞ்சாப் அணி 1.5 கோடி மற்றும் ஒரு உள்ளூர் வீரரை பெற்றுக் கொண்டு அஸ்வினை அணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டது.
அஸ்வினுக்கு பெரிய தொகை
அஸ்வினின் ஏல விலையான 7.6 கோடியை டெல்லி அணி அவருக்கு அடுத்த ஐபிஎல் தொடரில் கொடுக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக 1.5 கோடி பணம் கொடுத்து அவரை வாங்கி இருக்கிறது டெல்லி அணி. 2020ஆம் ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ள நிலையில், ஒரு ஆண்டிற்கு மட்டும் அஸ்வினை தங்கள் அணியில் வைத்திருக்க பெரிய தொகை கொடுத்துள்ளது டெல்லி அணி.