பஞ்சாப் அணி கேப்டன்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக 2018இல் நியமிக்கப்பட்டார் அஸ்வின். கேப்டனாக இருந்த இரண்டு ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் அஸ்வின்.
தோல்விகளால் எடுத்த முடிவு
ஆனாலும், இரண்டு சீசனிலும் இரண்டாம் பாதியில் சொதப்பிய பஞ்சாப் அணி பிளே - ஆஃப் கூட செல்லாமல் தடுமாறியது. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் அவரை அணியை விட்டே நீக்க முடிவு செய்த பஞ்சாப் அணி அவரை வேறு அணிக்கு மாற்றம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
டெல்லி கேபிடல்ஸ் விருப்பம்
மற்றொரு ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்தது. அந்த அணியுடன் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் தயார் செய்யும் நிலை வரை இரு அணிகளும் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
வெடித்த பண விவகாரம்
ஆனால், அதன் பின் அஸ்வினுக்கும் - பஞ்சாப் அணிக்கும் இடையே அணி மாற்றம் தொடர்பான பண விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளதாகவும், அதனால் அணி மாற்றம் தாமதமாகி இருப்பதாக கூறப்பட்டது.
அனில் கும்ப்ளே வந்தார்
ஆனால், அதன் பின் எல்லாமே தலைகீழாக மாறியது. அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். அவருடைய விருப்பத்தின் பேரில் அஸ்வின் பஞ்சாப் அணியிலேயே நீடிப்பார் என செய்திகள் வெளியாகின.
திடீர் மாற்றம்
பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என ஒரேடியாக பல்டி அடித்தார். இதை அடுத்து அஸ்வின், 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் தான் ஆடவுள்ளார் என்பது தெளிவாகி இருக்கிறது.
என்ன திட்டம்?
அஸ்வின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்பதோடு ஓரளவு பேட்டிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேனும் கூட. அதனால், அவரை ஆல் - ரவுண்டராக அணியில் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு அந்த அணி வந்திருக்கலாம்.
கேப்டன் பதவி சந்தேகம்
எனினும், அவருக்கு இந்த தொடரிலும் கேப்டன் பதவி கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அஸ்வினை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் அனில் கும்ப்ளே கூறினார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவரே அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? என்பது பற்றி பேசி இருக்கிறார்.
அனில் கும்ப்ளே கருத்து
அனில் கும்ப்ளே கூறுகையில், அஸ்வின் அல்லது எந்த வீரர் குறித்த முடிவானாலும் அது அணிக்குள் எடுக்கப்பட வேண்டிய முடிவு. அஸ்வின் அணியின் சிறந்த சொத்து. ஆனாலும், யாரை கேப்டனாக நியமிப்பது என்பதை போர்டு அமர்ந்து தான் தீர்மானம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
நிச்சயம் கிடைக்காது
ஐபிஎல் வட்டாரத்தில் வரும் செய்தியின் அடிப்படையில் அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதில் பஞ்சாப் அணி யாரை வாங்குகிறதோ, அதன் அடிப்படையில் பல முடிவுகள் மாறலாம்.