முறையான பயிற்சி வேண்டும்
இந்தியா -வங்க தேச அணிகள் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தங்களது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளன. இந்நிலையில் போதிய பயிற்சியுடன் பகலிரவு போட்டியை துவங்கியிருக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
சிறந்த பயிற்சி வேண்டும்
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவேனும் முறையான பயிற்சிபெற இந்திய அணிக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.
3 நொடிகளே கால அவகாசம்
ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டிகளை விளையாட கடந்த ஆண்டு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுத்து நடத்தும் இந்த பகலிரவு போட்டி குறித்து தீர்மானிக்க தனக்கு 3 நொடிகளே கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் கோலி தெரிவித்திருந்தார்.
போதிய பயிற்சி வேண்டும்
இந்நிலையில் கோலியின் கருத்தை வங்கதேச அணியின் கேப்டன் மோமிநுல் ஹாக்கும் பிரதிபலித்துள்ளார். பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளை தங்களுடைய அணியும் முதல்முறையாக எதிர்கொள்ளவுள்ள நிலையில், போதிய பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சமாளிப்பது சவாலான விஷயம்
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா போன்றவர்களின் உலகத்தரமான பந்துவீச்சை விளக்குகளின் ஒளியில் எதிர்கொள்வது வங்கதேசத்திற்கு சவாலான விஷயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் விளையாடுவது சவால், மகிழ்ச்சி
இந்தியா போன்ற உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள அணியுடன் விளையாடுவது மிகுந்த சவாலான மற்றும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகும் என்றும் மோமிநுல் தெரிவித்துள்ளார்.
போட்டியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம்
போதிய பயிற்சியின்மை, லைட் வெளிச்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்பது போன்ற சவால்கள் இருந்தாலும், அனைவரும் விருப்பத்துடன் காத்திருக்கும் இந்த பகலிரவு போட்டியை பிங்க் பந்துகளில் எதிர்கொள்ள வங்கதேச அணியும் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.