ஐபிஎல் தொடர்
கடந்த அக். 15ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாகத் தொடக்க வீரர் டு பிளசிஸ் 86 ரன்களை குவித்தது. அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்குச் சிறப்பான ஒரு தொடக்கம் கிடைத்தாலும் கூட மிடில் ஆர்டர் சொதப்பியதால் 20 ஓவர்களில் 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரு புதிய அணிகள்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகளைச் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. இதற்கான ஏலம் கடந்த திங்கள்கிழமை துபாயில் நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ 7,090 கோடிக்கு வாங்கியது. அதேபோல குஜராத்தை மையமாகக் கொண்ட அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் ரூ 5625 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
யாரும் எதிர்பார்க்கவில்லை
அதானி, மென்சிஸ்டர் போன்ற நிறுவனங்களே வாங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சஞ்சீவ் கோயங்கா குழுமம் மற்றும் சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் இரு அணிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் சிவிசி நிறுவனம் ஏற்கனவே பார்முலா ஒன், கால்பந்து என விளையாட்டுத் துறையில் பல்வேறு முதலீடுகளைச் செய்துள்ளது. இதுபோன்ற ஒரு சர்வதேச நிறுவனம் ஐபிஎல் அணியை வாங்கியுள்ளது ஐபிஎல் தொடரைச் சர்வதேச அளவில் மேலும் பிரபலப்படுத்த உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் மோடி கேள்வி
இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது பெட்டிங் நிறுவனங்கள் கூட ஐபிஎல் அணியை வாங்கலாம் என்று நினைக்கிறேன். இது புதிய விதியாக இருக்க வேண்டும். ஏலம் எடுத்த நபர் பெரிய பெட்டிங் நிறுவனத்தையும் வைத்துள்ளார். - பிசிசிஐ தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்? இப்படிப்பட்ட நிலையில் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.
சிவிசி கேபிடல்ஸ்
சிவிசி நிறுவனம் ஒரு தனியார் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஆகும். அவர்கள் பெட்டிங் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துள்ளனர். இந்த சிவிசி கேபிடல்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக ஜெர்மனியைச் சேர்ந்த சூதாட்ட நிறுவனமான டிபிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணி ஒன்றி வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.
லலித் மோடி பற்ற வைத்த நெருப்பு
லலித் மோடியை தொடர்ந்து பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து சிவிசி கேபிடல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் பட்சத்தில், அகமதாபாத் அணி அதானி குழுமத்திற்குச் செல்லும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். அகமதாபாத் அணியை அதான நிறுவனம் ரூ 5,100 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.