2வது போட்டியில் நீக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மறுதினம் 2வது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது காயம் இன்னும் முழுமையாக சரியாகாத நிலையில் அவர் 3வது போட்டியில் பங்கேற்பார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்நிலையில், அவர் நேற்றைய பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவும் ஆனால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை என்று கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். அவர் விளையாடுவது அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகவும் தேவையான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கையில் லாங்கர்
ஆனால் வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று தான் நம்புவதாகவும் அதற்கென பதற்றத்துடன் காத்திருப்பதாகவும் லாங்கர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டின் மீது அவருக்கு மிகப்பெரிய விருப்பம் உள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார்.
முழுமையாக குணமாகாத காயம்
இநதியாவிற்கு எதிரான கடந்த ஒருநாள் தொடரின்போது வார்னருக்கு காயம் ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. மேலும் சிட்னியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா பரவல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைகள் காரணமாக அவர் உடனடியாக அணியில் இணைவதிலும் பிரச்சினை உள்ளது.