கொழும்பு: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா, அப்பதவியை துறந்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கான கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், 20 ஓவர் இலங்கை அணி கேப்டனாகவும் பொறுப்பு வகிக்க உள்ளார்.
முழங்கால் வலியால் அவதிப்படும் லசித் மலிங்கா, ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித்தொடருக்கான, இலங்கை அணி கேப்டனாக பதவி வகித்தார். யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஆடிய அவர், பிற ஆட்டங்களில் களமிறங்கவில்லை.
இலங்கை அணியும், அந்த ஒரு போட்டியைதவிர மற்ற 3 போட்டிகளிலும் தோற்று பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில், இலங்கை டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து மலிங்கா விலகியுள்ளார். மேத்யூஸ் கேப்டனாக தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலிங்கா குறிப்பிட்ட சில கிரிக்கெட் தொடர்களில் மட்டும் ஆடுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டி20 உலக கோப்பையை இலங்கை அணி, மலிங்கா முதல்முறையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.