அனில் கும்ப்ளே
தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து அடுத்த பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க காய் நகர்த்தி வருகிறது பஞ்சாப் அணி. அது குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
உரிமையாளர்கள் முடிவு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்கள் அனில் கும்ப்ளேவை நேரில் சந்திக்க உள்ளதாகவும், அப்போது அணியில் மாற்றங்கள் செய்ய அனில் கும்ப்ளேவுக்கு எத்தனை காலம் ஆகும், அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அனில் கும்ப்ளே முடிவு என்ன?
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, அந்த பதவியில் இருந்து விலகிய பின் வர்ணனையாளர், ஐசிசி பணிகள் என நேரமின்றி சுற்றி வருகிறார். அதனால், அதை மீறி அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொள்வாரா? என்பது மட்டுமே ஒரே கேள்வியாக உள்ளது.
காரணம் என்ன?
அனில் கும்ப்ளேவை தேர்வு செய்ய முக்கிய காரணம், கிரிக்கெட் வீரராக அவரது நீண்ட அனுபவம் மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்திய அணி மட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளுக்கும் அவர் பயிற்சி அளித்துள்ளார்.
போர்டு முடிவு
பஞ்சாப் அணியின் போர்டு இன்னும் சில தினங்களில் கூட உள்ளது. அந்த சந்திப்பில் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமிக்க போர்டு மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பஞ்சாப் நம்பிக்கை
அனில் கும்ப்ளே தங்கள் அணிக்கு பயிற்சியாளராக வந்தால், இதுவரை அடைந்த தோல்விகளை எல்லாம் மாற்றி விடலாம் என நம்புகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். மிகவும் கண்டிப்பான பயிற்சியாளராக அறியப்படும் அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியை பிளே - ஆஃப் செல்ல வைப்பார் என்று நம்புகிறது அந்த அணி.
அடுத்த தேர்வு
அனில் கும்ப்ளே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குள் தன் மற்ற பணிகளில் இருந்து விடுவித்துக் கொண்டு வருவார். ஒருவேளை அவரால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், பஞ்சாப் அணி ஆன்டி பிளவர், டேரன் லேஹ்மன் உள்ளிட்டோரை அடுத்த கட்ட தேர்வாக வைத்துள்ளது.
பேட்டிங் பயிற்சியாளர் இவர் தான்
பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜார்ஜ் பெய்லியை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரும் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மைக் ஹஸ்ஸி பேட்டிங் பயிற்சியாளர் பதவியை மறுத்துள்ளார்.
அஸ்வின் மாற்றம்?
இந்த நகர்வுகளின் இடையே அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வாரம் வெளியான தகவல்களின் அடிப்படையில், அஸ்வின் - பஞ்சாப் அணி இடையே பண விவகாரத்தில் சிக்கல் இருப்பதால், டெல்லி அணிக்கு அஸ்வின் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டு இருந்தது.