ஆர்ஷ்தீப் சிங்
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் கட்டுகோப்பாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணறடித்தார் ஆர்ஷ்தீப் சிங். அதுவும் போட்டியின் முக்கிய கட்டமான 16 ஓவரிலிருந்து 20வது ஓவர் வரை நடப்பு சீசனில் ஆர்ஷ்தீப் சிங் மொத்தமே 11 பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் மட்டுமே விட்டு கொடுத்துள்ளார். இதனால் ஆர்ஷ்தீப் சிங், தென்னாப்பிரிக்க தொடரிலும் கலக்கினால் உலக கோப்பைக்கான டிக்கெட் நிச்சயம்.
உம்ரான் மாலிக்
நடப்பு ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற உம்ரான் மாலிக் 14 போட்டியில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறையாமல் பந்தவீசும் உம்ரான் மாலிக், ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளத்திற்கு ஏற்ற வீரர். ஆனால் அதற்கு முதலில் தென்னாப்பிரிக்க தொடரில் கிடைக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
குல்தீப் யாதவ்
நடப்பு ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் 14 போட்டியில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் சிறப்பாக பந்தவீசினாலும், தொடர் முடிவில், அவரது பந்தவீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்க தொடங்கிவிட்டனர். டி20 உலககோப்பை அணியில் சாஹல், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் டி20 உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் குல்தீப் தனது மாயஜால பந்துவீச்சை தென்னாப்பிரிக்க தொடரில் வெளிப்படுத்த வேண்டும்.
தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரில் கலக்கியதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைத்துள்ளது. 14 போட்டியில் 330 ரன்களை அடித்துள்ள தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் ரேட்டையும் 183 என்ற நிலையில் வைத்துள்ளார். இந்திய அணியிலும் ஃபினிஷர் ரோலுக்கு கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் கார்த்திக் அதே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலககோப்பையில் அவரது இடம் உறுதி.