அத்தனை நேர்த்தி
இந்த போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. மேகமூட்ட வானிலை, ஆண்டர்சன் - ஓலே ராபின்சன் பவுலிங் தாக்குதல் என அனைத்தையும் சமாளித்து ரோஹித் - ராகுல் ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை சேர்த்தது. ரோஹித்திடம் இருந்து இப்படியொரு அட்டகாசமான ஆட்டத்தை எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக விளையாடினார். அதுவும் ஆண்டர்சனின் இன் ஸ்விங் - அவுட் ஸ்விங் தாக்குதல் என்று எதற்கும் அவர் அசரவில்லை. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், 83 ரன்களில் வெளியேறினார்.
குளிரிலும் வியர்த்த பவுலர்கள்
மறுமுனையில், ரோஹித்தை மிஞ்சும் அளவுக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லோகேஷ் ராகுல். அவர் மறந்தும் கூட எந்த பந்தையும் தொடவில்லை. அவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் விளையாடினார். டிரைவ் விளையாடுவது, கட் ஷாட் அடிப்பது என்று எதையுமே அவர் முயற்சி செய்து பார்க்கவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், சுத்தமாக ரிஸ்க் எடுக்கவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் மாறி மாறி வீசியும், அவரைக் அசைத்துப் பார்க்க முடியவில்லை. இறுதியில், இங்கிலாந்து பவுலர்களை அந்த குளிரிலும் வியர்க்க வைத்து சதம் விளாசினார். அதில் ஒரு சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.
மிகப்பெரிய விஷயம்
லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது மிகபெரும் விஷயம். கிரிக்கெட்டர்கள் அதனை தங்களின் கௌரவமாகவும் கருதுகிறார்கள். இந்நிலையில், அங்கு சதமடித்த 3வது இந்திய ஓப்பனர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அங்கு 1952ம் ஆண்டு வினோ மான்கட் 184 ரன்களை விளாசியிருந்தார். அதன் பின்னர் 1990ம் ஆண்டு ரவி சாஸ்திரி 100 ரன்கள் அடித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் ஆசிய கண்டத்திற்கு வெளியில் அதிக சதம் அடித்த இந்திய ஓப்பனிங் வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் 2வது இடத்தை ஷேவாக்குடன் பகிர்ந்துள்ளார். சுனில் கவாஸ்கர் 15 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விரேந்திர சேவாக் 4 சதங்களுடன் 2வது இடத்திலும், வினோ மான்கட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் 3 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
ராகுல் சேவாக்
லோகேஷ் ராகுல் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் ஆனார். தற்செயலாக, கடைசியாக 2018ல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக சதம் அடித்திருந்தார். இப்போது மீண்டும் அவரே சதம் அடித்திருக்கிறார். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் நாளில் லோகேஷ் ராகுல் இந்த சாதனையை நிகழ்த்தினார். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த மூன்றாவது இந்திய தொடக்க வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். இது ராகுலின் ஆறாவது டெஸ்ட் சதம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சதமாகும். லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த இந்த சதத்தால், ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக்கை ராகுல் சமன் செய்துள்ளார். ராகுல் மற்றும் சேவாக் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக ஆசியாவுக்கு வெளியே நான்கு சதங்கள் அடித்துள்ளனர். ஆசியாவிற்கு வெளியே 15 சதங்கள் அடித்து சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார்.