நிதான ஆட்டம்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து 2ம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தாலும், இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பாகவே விளையாடினார்கள். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும், இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நடந்தது என்ன?
ரோஹித் ஷர்மாவை விட ஒருபடி வேகமாகவே விளையாடிய லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறும் வரை, அவர் தான் அவுட்டானதை ஒப்புக் கொள்ளவேயில்லை. அதாவது, ஆண்டர்சன் ஓவரில் அவர் பந்தை எதிர்கொள்ள தயாரான போது, அவரது பேட் அவரது பேடின் பின்பகுதியை உரசி முன்னாள் வந்தது. இதனால், பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலி எழுந்தது. இங்கிலாந்து வீரர்களும் ஸ்ட்ராங்காக அவுட் அப்பீல் செய்தனர். தொடர்ந்து ரிவ்யூ கேட்கப்பட, அப்போது தான் பந்து பேட்டிங் பின்புறம் மிக மிக லேசாக உரசிச் சென்றிருப்பது தெரிந்தது.
மீண்டும் மறுப்பு
ஆனால், ராகுல் தனது பேட் பேடில் உரசியதால் தான் சப்தம் கேட்டது என்பதில் உறுதியாக இருந்தார். அது உண்மையும் கூட. ஆனால், அவர் அந்த மனநிலையில் இருந்ததால், பேட்டில் லேசாக பந்து உரசியதை அவர் கவனிக்கவில்லை. இதனால், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தும், ராகுல் கள நடுவரிடம், 'தான் அவுட் இல்லை.. பேட் பேடில் தான் பட்டது' என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டுத் தான் சென்றார். அதன்பிறகு அவர் டிரெஸ்ஸிங் ரூம் சென்று மானிட்டரில் பார்த்த பிறகு, தான் அவுட் என்பதையே நம்பினார்.
ரோஹித் அபாரம்
இந்நிலையில், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா இந்தியாவுக்கு வெளியே.. அதாவது வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். அதுவும், மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து மெகா சிக்ஸ் அடித்து தனது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இப்போது 100 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது. இந்திய அணி, 200 - 250 ரன்கள் வரை முன்னிலை பெறும் பட்சத்தில், இந்தியா வெற்றிப் பெற போராடிப் பார்க்கலாம். ஆனால், அதற்கு இந்தியாவின் மிடில் மற்றும் லோ ஆர்டர் ஒழுங்காக விளையாட வேண்டும். அட்லீஸ்ட் தலைக்கு 30 ரன்கள் அடித்தால் போதும். பிட்சும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக மாறி வருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக என்பதை விட, ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்குகிறது எனலாம்.