பரபர மேட்ச்
சமீப காலத்தில் இப்படியொரு கமர்ஷியலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் பார்த்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே. 90-களில் வெளிவந்த ரஜினிகாந்த் படத்தைப் போல பரபரவென இருந்தது 2வது டெஸ்ட் போட்டி. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் உதவியுடன் 391 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அந்த அணி 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
நிரூபித்த புஜாரா
ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தன. எனினும், தொடர்ந்து சொதப்பி வந்த புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பான விளையாடினர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 352 பந்துகளை சந்தித்தனர். அதாவது 58 + ஓவர்கள் முழுதாக நின்றனர். பிறகு நேற்று (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நங்கூரம் போட்டு களத்தில் நின்றது.
வார்த்தை மோதல்
அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து அணி வீரர்கள் பும்ராவை டார்கெட் செய்து வம்பிழுத்ததே. இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். அவரை அப்படி பவுன்சர் வீசச் சொன்னது கேப்டன் கோலி. இதில், ஆண்டர்சன் எசக்குபிசகாக அடி வாங்கினார். தொடர்ந்து தோள்பட்டையில் அடி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆண்டர்சனுக்கும் பும்ராவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தொடர் பவுன்சர்களால் ரொம்பவே டென்ஷனான ஆண்டர்சன், அங்கேயே தனது கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். இதில், கேப்டன் கோலியும் இணைந்து ஆண்டர்சனிடம் வாக்குவாதம் செய்ய, இங்கிலாந்து வீரர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு, பும்ரா களமிறங்கிய போது, வார்த்தைகளாலும் பவுன்சர்களாலும் வம்பிழுதித்தனர்.
மோதிய வீரர்கள்
நேற்று 5வது நாள் ஆட்டம் தொடங்கிய போது, பண்ட், இஷாந்த் இருவரும் ஓலே ராபின்சன் ஓவரில் வெளியேறினார்கள். இதன் பிறகு களமிறங்கிய பும்ராவுக்கு மார்க் வுட், ராபின்சன் கூட்டணி கடுமையான பவுன்ஸ் பந்துகளை போட்டு அச்சுறுத்தியது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மற்றும் மார்க் வுட் தன் பங்குக்கு பும்ராவை வார்த்தைகளால் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த பும்ரா, பதிலுக்கு பதில் வார்த்தை மோதலில் ஈடுபட களம் ரொம்பவே சூடானது. பிறகு ஷமி வந்து பும்ராவை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அப்போதும் கோபம் தணியாத பும்ரா தொடர்ந்து கோபமாக பேசிக் கொண்டே இருந்தார். அதற்கு அடுத்த ஓவரில், மார்க் வுட் மிக வேகமான பவுன்ஸ் பந்து ஒன்றை வீச, அந்த பும்ரா ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இதனால் ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார் பும்ரா. உடனடியாக இந்திய மருத்துவக் குழு வந்து பும்ராவை சோதித்தது. ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு எந்த அடியும் படவில்லை. இரு அணி வீரர்களும் ரொம்பவே உக்கிரமாக மோதிக் கொண்டார்கள்.
இந்தியா வெற்றி
ஆனால், இந்த சம்பவத்துக்கு பிறகு ஆட்டம் அப்படியே திசை மாறியது. பும்ராவும் - ஷமியும் மிக நேர்த்தியாக விளையாடினார்கள். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா விரைவில் ஆல் அவுட் ஆகி, இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், விராட் கோலி டிக்ளேர் செய்யும் அளவுக்கு இந்த ஜோடி அற்புதமாக பேட்டிங் செய்தது. இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அவமானம் என்று கூட சொல்லலாம். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது இந்திய அணி.
லோகேஷ் ராகுல் வார்னிங்
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு, இந்தியா - இங்கிலாந்து வீரர்கள் இடையேயான மோதல் குறித்து முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய லோகேஷ் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் தெரிவித்த பதில், பிரச்சனைக்கு மேலும் தீனி போட்டது போல் அமைந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "பும்ரா மற்றும் ஷமி இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் நன்றாக இருந்தது. அணியின் பவுலர்கள் களத்தில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் போது அது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். இரு அணிகள் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், தனிப்பட்ட முறையில், இரு அணிகளும் வெற்றிப் பெறுவதில் எவ்வளவு தீவிரமாக, வெறித்தனமாக இருந்தன என்பதையே காட்டுகிறது. அப்படித்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. நாங்கள் ஒரு அணியாக ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. எங்களது எந்த ஒரு வீரரையும் நீங்கள் டார்கெட் செய்து உரசினால், ஒட்டுமொத்த அணியிடமும் நீங்கள் உரசுவதாகத் தான் அர்த்தம். அப்படி செய்தால், அணியின் 11 வீரர்களும் திரும்பி வந்து நிற்போம்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.