மனஅழுத்தத்தை தரும்
தான் எப்போதுமே நீண்டகால இலக்குகளை வைத்துக் கொள்வதில்லை என்றும் அது மன அழுத்ததையே தருவதாகவும் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக, 224 ஒருநாள் போட்டிகள், 32 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள ரோகித் சர்மா, ஒவ்வொரு தொடருக்கு முன்பும் தான் குறுகிய கால இலக்குகளை நிர்ணயிப்பதாகவும் கூறியுள்ளார்.
நன்றாக கைகொடுக்கிறது
ஸ்டார் ஸ்போர்ட்சின் 'கிரிக்கெட் கனெக்டட் : சாட்ஸ்' ஷோவிற்காக பேசிய ரோகித் சர்மா, இந்த குறுகிய கால இலக்குகளை 2 முதல் 3 மாதங்களுக்கு சில போட்டிகளுக்கு மட்டுமே தான் தீர்மானிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த முறை தனக்கு மிகவும் உதவி புரிவதாகவும், இதையே தொடர்ந்து எதிர்காலத்திலும் தான் பின்பற்ற விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா நம்பிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா, விரைவில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று தெரியாது என்று கூறியுள்ள ரோகித், முதலில் ஐபிஎல் தொடரா அல்லது டி20 உலக கோப்பை தொடரா எதை ஆடப்போகிறோம் என்பதும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தொடரை இறுதி செய்ய வேண்டும்
இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள தொடரும் விளையாடப்பட வேண்டும் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் தொடரில் 9115 ரன்களை குவித்துள்ள ரோகித் சர்மா, இதுகுறித்து இந்திய நிர்வாகிகள் முடிவெடுத்து முதலில் எந்த தொடரை துவங்க வேண்டும் என்று இறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.