53 நாட்கள் நடைபெறுகின்றன
ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் வரையில் யூஏஇயில் 53 நாட்கள் நடைபெறவுள்ளன. இதையொட்டி வரும் 20ம் தேதி வாக்கில் 8 ஐபிஎல் அணிகளும் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களும் தங்களது பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.
விராட் கோலி சிலிர்ப்பு
இந்நிலையில் சமீபத்தில் ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்சுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய விராட் கோலி, அந்த அணியுடன் தனக்கான 9 வருட உறவு குறித்து சிலிர்ப்பை வெளியிட்டார். 3 முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டதை நினைவு கூர்ந்த அவர், இந்த ஆண்டு கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
அக்கறை, அன்பு காரணம்
மேலும் எந்த சூழலிலும் இந்த அணியைவிட்டு தான் வெளியேற நினைக்கவில்லை என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். அந்த அணி தன்னிடம் காட்டும் அக்கறை மற்றும் அன்பே இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஆர்சிபி அணிக்காக 177 போட்டிகளை விளையாடி 5,412 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இந்த ஆண்டாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
|
வீடியோ வெளியிட்ட விராட்
இதனிடையே, போட்டிகளுக்கு வெளியே ஆர்சிபி குறித்த தன்னுடைய நினைவலைகளை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின்மூலம் வீடியோவாக பகிர்ந்துள்ள விராட் கோலி, அணி மீதான விசுவாசமே அனைத்தையும் விட உயர்ந்தது என்றும் ஐபிஎல் போட்டிகளுக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.