காலி மைதானங்களில் ஆட்டம்
இந்த ஆண்டின் இறுதியில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து அவர்களின் சொந்த மண்ணில் இந்தியா விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டிகள் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
கூட்டம் இல்லாம எப்படி?
இந்நிலையில், தன்னுடைய ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாடும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்துவரும் விராட் கோலி, ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் எப்படி விளையாடுவார் என்பதை காண ஆவலுடன் உள்ளதாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லியோன் மற்றும் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளனர்.
சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்
இந்நிலையில், விராட் கோலி கிரிக்கெட் உலகில் ஒரு சூப்பர்ஸ்டார் என்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறமை அவருக்கு உள்ளதாகவும் நாதன் லியோன் கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் இல்லாத சூழலில் அவருடைய ஆட்டத்தை காண தான் ஆவலுடன் உள்ளதாக மிட்செல் ஸ்டார்க்குடனான தன்னுடைய உரையாடலில் தான் தெரிவித்ததாக நாதன் லியோன் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் ஆடுவது சிறப்பு
ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய அணியுடன் ஆடுவதே சிறப்பானது என்றும் லியோன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், லாபுசாக்னே ஆகியோர் தற்போது அணிக்கு வலிமை சேர்த்துள்ளதாகவும் நாதன் லியோன் தெரிவித்துள்ளார்.