3 வருட பஞ்சாயத்து
இந்த நிலையில், ரமேஷ் பவார், மிதாலி ராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதைப் பொருத்தவரை, எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று மதன் லால் தெரிவித்துள்ளார். ஆம்! ஏற்கனவே பவாருக்கும் மிதாலிக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கிறது. இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த தொடரில், உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
ஒப்பந்தம் கேன்சல்
அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாறி மாறி புகார் தெரிவித்தனர். தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்ட, மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.
சண்டை போடக் கூடாது
அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போது மீண்டும் ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியை கைப்பற்றி இருக்கிறார். இதுகுறித்து பேசிய மதன்லால், "குழுவில் உள்ள நாங்கள் அனைவரும் ரமேஷ் பவார் சிறந்த தேர்வு என்று உணர்ந்து ஒருமனதாக தேர்வு செய்தோம். அவர் மிதாலி ராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதைப் பொருத்தவரை, எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது.
உறுதி செய்யணும்
ஒரு கேப்டனாக மிதாலியின் பணி அவரது ரோலில் கவனம் செலுத்துவதோடு, அணியை முன்னோக்கி கொண்டு செல்ல அவர் பணியாற்ற வேண்டும். இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், இருவரும் ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும், இந்திய பெண்களின் கிரிக்கெட் முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.