ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பில்லை
ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நிச்சயம் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தான் நியமிக்கப்பட உள்ளார் என்றே பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.
விண்ணப்பிக்கப் போவது யார்?
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலத்த போட்டி இருக்கும். அதற்கு இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் அதிக சம்பளமும் ஒரு காரணம். பலரும் விண்ணப்பம் செய்தாலும், அதில் முக்கிய பெயர்களாக டாம் மூடி, கேரி கிர்ஸ்டன், சேவாக் மற்றும் ஜெயவர்தனே ஆகியோரை குறிப்பிடுகிறார்கள்.
ஜெயவர்தனே பின்னணி என்ன?
இவர்களில் ஜெயவர்தனே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால், அதன் பின்னணியில் நிச்சயம் ரோஹித் சர்மா இருப்பார். ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ்-இன் அணிக்கு ஜெயவர்தனே பயிற்சியாளராக இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது மும்பை அணி.
கேப்டன் மாற்றம்
விராட் கோலியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரை டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக வைத்துக் கொள்ள பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என்கிறார்கள்.
கேப்டனுக்கு ஏற்ற பயிற்சியாளர்
ஏற்கனவே, விராட் கோலிக்கு ஏற்ற பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருந்தது போல, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவருக்கு ஏற்ற ஜெயவர்தனே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற ஊகம் கூறப்படுகிறது.
இந்திய பயிற்சியாளரா?
சிலர் இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளர் தான் நியமிக்கப்படுவார் என்றும் கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சேவாக் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. சேவாக் இயல்பிலேயே அதிரடியாகத் தான் நடந்து கொள்வார் என்பதால், பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அணியை முற்றிலுமாக மாற்றி விடுவார். இவருக்கும் அதிக வாய்ப்புள்ளது.