மும்பை: ஐபிஎல் போட்டியின் இறுதியாட்டத்துக்கு போக முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியதற்கு மகேந்திரசிங் டோணியின் தவறான அணுகுமுறைகள்தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
7வது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 226 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் வீரேந்திரசேவாக் சதம் அடித்து அசத்தினார். பேட்டிங்கின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் ஜெயித்தும், பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய கூறி இமாலய தவறை செய்ததை அப்போதுதான் டோணி உணர்ந்தார்.
வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரரான மெக்கல்லத்தை மத்திய வரிசையில் இறக்க முடிவு செய்த டோணி, நடுவரிசை ஆட்டக்காரர் டு பிளெசியை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். அவர் டக் அவுட் ஆனார்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய மெக்கல்லம் மத்திய வரிசையில் இறங்கி ரன் குவிக்க தடுமாறினார். 25 பந்துகளில் 87 ரன் குவித்த ரெய்னாவை ரன் அவுட்டாக்கியதுடன் தானும் ரன் அவுட்டாகி சென்னை அணியை கவிழ்த்துவிட்டார்.
ஆனால் நிலைமை மோசமாக இருந்த தருணத்திலும் டோணி களமிறங்கவில்லை. ஐந்தாவது வீரராக ஜடேஜாவையும், அதற்கு பிறகு டேவிட் ஹசியையும் களமிறக்கி 7வது வீரராகத்தான் டோணி இறங்கினார்.
அப்போது வெற்றிக்கு 48 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்பட்டது. டோணி போன்ற வீரரால் இந்த ஸ்கோரை எட்ட முடியும். ஆனால் அவரோ அந்த நிலையிலும், சிங்கிள் ரன் எடுத்து அஸ்வின் பேட்டிங் செய்ய இடமளித்தார். சிங்கிள் ரன் ஓடாமல் டோணி பவுண்டரிகளை மட்டும் குறிவைத்திருந்தாலும், ஓவருக்கு 15 ரன்களுக்கு மேலாவது எடுத்தபடி வந்திருக்கலாம். ஓவர்கள் முடியும் தருவாயை எட்டும்போதாவது ஹெலிகாப்டன் ஷாட்டை அடிப்பார் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜான்சன் பந்து வீச்சில் மிகவும் திணறியபடி பேட்டிங் செய்தார் டோணி.
கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 31 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே டோணியால் எடுக்க முடிந்தது. பந்தையத்துக்கு பிறகு விரக்தியில் பேசிய டோணி எங்கள் பவுலர்கள் 200 ரன்களை கொடுக்காமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம் என்று கூறினார். பவுலர்கள் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு எதற்காக இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.