"அவர்தான் முடிவெடுக்க வேண்டும்"
சர்வதேச போட்டிகளில் தன்னுடைய எதிர்காலம் குறித்து முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிதான் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ஆனால் தலைமை தேர்வாளராக தோனியின் முடிவு குறித்து யோசித்துக் கொண்டிருக்காமல் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக நகர்ந்து செல்வதே தனது பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்எஸ்கே பிரசாத் மனம்திறப்பு
தலைமை தேர்வாளராக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தோனியின் மிகச்சிறந்த ரசிகன் தான் என்று தெரிவித்துள்ள எம்எஸ்கே பிரசாத், தோனி தன்னுடைய தலைமையின்கீழ் இரண்டு உலக கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்தவர் என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பு
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரராக உள்ள ரோகித் சர்மா, அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்த எம்எஸ்கே பிரசாத், அவருடைய விளையாட்டு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஒரு தொடரில் அவர் ஓய்வெடுத்துவிட்டு பின்பு விளையாடினால் மேலும் சிறப்பாக விளையாட முடியும் என்று தான் கருதுவதாகவும் பிரசாத் குறிப்பிட்டார்.
சொதப்பிய விஜய் சங்கர்
தற்போது 4வது இடத்தில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பொருந்தியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த எம்எஸ்கே பிரசாத், உலக கோப்பையில் இந்த இடத்தில் விளையாடிய விஜய் சங்கர், சொதப்பிய நிலையில், தற்போது, அந்த இடத்திற்கான சரியான தேர்வை தேர்வாளர்கள் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். டெஸ்ட் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரியும் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக பொருந்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர் பயிற்சி அளிப்பு
காயம் காரணமாக சில மாதங்கள் சர்வதேச அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா, தன்னுடைய திறமையில் தேங்கிவிடாமல் இருப்பதற்காக அவருக்கு சிறப்பான தொடர் பயிற்சிஅளிக்கப்பட்டதாகவும், அதனால்தான் அவரால் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாடிய போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான கடந்த டி20 தொடரின் இறுதி போட்டியில் பும்ரா 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கருண் நாயர் குறித்து வருத்தம்
டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து சாதனை புரிந்த கருண் நாயர் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து தங்களது நிலைத்தன்மையை நிரூபிக்காததை சுட்டிக் காட்டிய பிரசாத், முச்சதத்திற்கு பின்பு கருண் நாயர் என்ன சாதனை புரிந்தார் என்று கேள்வி எழுப்பினார். சுப்மன் கில் மற்றும் ஹனுமா விஹாரி போன்றவர்கள் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளையாடிவரும் நிலையில் கருண் நாயர் மற்றும் அம்பத்தி ராயுடு ரஞ்சிக் கோப்பையில் தங்களது திறமையை நிரூபித்து வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.