பாகுபாடு இல்லை
225 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ள மலிங்கா, சிறிய வீரர், பெரிய வீரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகக் கூடியவர். பிற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் வேகப் பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் பெரிய மனது கொண்டவர். அப்படித் தான் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த பும்ராவிற்கு பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் மலிங்கா.
வித்தியாசமான பந்துவீச்சு
2013ஆம் ஆண்டு பும்ரா ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். அப்போது பும்ராவின் ஒரே சிறப்பம்சம், அவர் பந்துவீசும் முறை வித்தியாசமாக இருந்தது தான். மலிங்காவும் வித்தியாசமான பந்துவீச்சை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒற்றுமையே அவர்கள் இருவரையும் இணைத்தது.
அறிவுரை மற்றும் பயிற்சி
சர்வதேச அரங்கில் எப்படி வேகப் பந்துவீச்சை கையாள்வது, மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், என்ன மாதிரியான பயிற்சிகள் செய்ய வேண்டும் என மலிங்காவிடம் கற்றுக் கொண்டார் பும்ரா.
மலிங்கா தான் காரணம்
கடைசி ஓவர்களில் எத்தனை அழுத்தமான நேரங்களிலும் எந்த சலனமும் இல்லாமல் பும்ரா பந்து வீசுகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மலிங்கா தான். இதை பும்ராவே பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணி இன்று முன்னணியில் இருக்க முக்கிய காரணம் பும்ரா. அவர் இத்தனை உயரத்திற்கு செல்ல முக்கிய காரணமான மலிங்கா ஓய்வு பெறுகிறார்.
இளமையில் வேகம்
தன் இளமைக் காலத்தில் உலகின் அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார் மலிங்கா. இலங்கை அணியின் பேட்டிங் மட்டுமே வலுவாக இருந்த நேரத்தில், அந்த அணியின் வேகப் பந்துவீச்சை தன் தோளில் சுமந்து எதிரணிகளை துவம்சம் செய்து வந்தார்.
இலங்கைக்கு இழப்பு
ஆனால், வயது ஏற ஏற அவரது வேகம் குறைந்தது. சில போட்டிகளில் மிரட்டினார். ஆனால், தொடர்ந்து அதை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில், ஓய்வு பெற உள்ளார். இலங்கை அணி தன் கடைசி மூத்த வீரரையும் இழந்து விட்டது என்பதே உண்மை.