சோதனை
இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் திவாதியா போன்ற பல வீரர்கள் தற்போது இந்த டெஸ்ட்டிற்காக பெங்களூர் சென்றுள்ளனர். இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை உட்பட இரண்டு விதமான சோதனைகள் வைக்கப்படுகின்றன. இந்த டெஸ்ட் முறை மூலமாகவே தற்போது வரை இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
கடினம்
யோ யோ டெஸ்ட் என்பது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போது வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி சுற்று வரை வேகத்தை அதிகரித்து அதிகரித்து நிற்காமல் ஓட வேண்டும். இதில் வெற்றிபெற குறைந்தது 17.1 புள்ளிகள் பெற வேண்டும்.
கூடுதல்
கூடுதலாக இன்னொரு டெஸ்ட் முறை இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி 2 கிலோ மீட்டர் தூரத்தை வீரர்கள் எவ்வளவு வேகமாக கடக்கிறார்கள் என்று சோதனை செய்யப்படும். இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2 கிமீ தூரத்தை 8.15 நிமிடத்தில் கடக்க வேண்டும். இன்னொரு பக்கம் பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள், ஸ்பின் பவுலர்கள் 8.30 நிமிடத்தில் இந்த தூரத்தை கடக்க வேண்டும். இதுதான் புதிய டெஸ்ட் முறையாகும்.
தோல்வி
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் , நிதிஷ் ராணா, ராகுல் திவாதியா, சித்தார்த் கவுல், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இந்த 2 கிமீ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளனர். தேசிய கிரிக்கெட் அகாடமி வைத்த டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளனர்.
மீண்டும்
இதில் பல வீரர்கள் வேகமாக ஓட முயன்று 1.5 கிமீ தூரத்திலேயே ஓட முடியாமல் கீழே விழுந்து இருக்கிறார்கள். பலர் ஓடுவதற்கு சிரமப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இதில் அளிக்கப்படும். அதிலும் தோல்வி அடைந்தால் அணி தேர்வில் இவர்களின் பெயரை கணக்கில் எடுக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.