மரியா மீதான எதிர்பார்ப்பு
நீண்ட கால ஓய்வுக்குப் பின் டென்னிஸ் களத்திற்கு திரும்பியிருக்கும், செரீனாவை வென்று மரியா மீண்டும் வெளிச்சத்திற்க்கு வருவார் என மரியாவின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். தற்போது தரவரிசையில் 24வது இடத்தில் இருக்கும், மரியா மீண்டும் முதல் இடத்தை கூட பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்தும், யாரும் எதிர்பார்க்காத நிலையில் விம்பிள்டன் முதல் சுற்று ஆட்டத்தில், விட்டாலியா டியாட்செங்கோவிடம் கடுமையான இழுபறிக்குப் பின் தோல்வியடைந்தார்.
வெற்றி வரை வந்த மரியா
தன் நாடான ரஷ்யாவை சேர்ந்த, தரவரிசையில் 132வது இடத்தில் இருக்கும், விட்டாலியாவை முதல் சுற்றில் சந்தித்தார், மரியா. விட்டாலியா முதுகில் ஏற்பட்ட காயத்தோடு இந்த போட்டியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்று மணி நேரம் கடந்த இந்த ஆட்டத்தில், மரியா முதல் செட்டை 6-7 (3/7) என்ற செட்களில் டை-பிரேக்கர் வரை சென்று போராடி வென்றார். இரண்டாவது செட்டில், ஒரு கட்டத்தில் 5-2 என்ற நிலையில் மரியா இருந்தார். இன்னும் ஒரு புள்ளி பெற்றால் மொத்த ஆட்டமும் வெற்றி என்ற நிலை.
ஆட்டத்தை மாற்றிய விட்டாலியா
அதன் பின், சுதாரித்த விட்டாலியா இரண்டாவது சுற்றை பெரும் போராட்டத்துக்குப் பின் கைப்பற்றினார். தொடர்ந்து, மூன்றாவது சுற்றில் ஆதிக்கம் செலுத்தினார். அவரின் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாத மரியா, மூன்றாவது சுற்றை இழக்க, விட்டாலியா தன் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றியை விம்பிள்டனில் பதிவு செய்தார்.
தோற்றாலும் நம்பிக்கையோடு மரியா :
தன் மோசமான விம்பிள்டன் ஆட்டத்துக்குப் பின், மரியா செய்தியாளர்களிடம் பேசிய போது, "நான் சில தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த வாய்ப்புகளை சந்திக்க வேண்டும். டென்னிஸ் ஒரு செயல்முறை. நான் அதில் இப்போது முன்னேறி வருகிறேன். ஒரு கிராண்ட்ஸ்லாம் வெல்லும் நபராக, நான் இத்தோடு முடிந்துவிடவில்லை" என நம்பிக்கையாக கூறினார். மரியா ஷரபோவா மீண்டு வருவாரா? என்று அடுத்து வரும் டென்னிஸ் தொடர்களில் பார்க்கலாம்.