கடும் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகில் இதுவரை 6 லட்சம் பேரை பாதித்துள்ளது. 27,000 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்கள் மூலம் மற்ற மனிதர்களுக்கு பரவி வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏழைகள் பலர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் வேலை இல்லாத பலருக்கு உதவி தேவையாக உள்ளது.
மொர்டாசா உதவி
வங்கதேசத்தில் தன் சொந்த ஊரான நரைல் நகரில் இருக்கும் 300 ஏழை குடும்பங்களுக்கு உதவ முன் வந்துள்ளார் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ராபே மொர்டாசா. அவர் இப்போது தனிமையில் இருக்கிறார்.
ஏற்பாடுகள்
தனிமையில் இருந்தாலும் தன் உறவினர்கள் அல்லது தன் பணியாளர்கள் மூலம் அந்த குடும்பங்களுக்கு அடுத்த இரு நாட்களில் உதவி செய்ய உள்ளதாக தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரின் உதவியாளர் கூறினார்.
இரு நாட்களில் உதவி
அவரது உதவியாளர் கூறுகையில், "நாங்கள் வசதி இல்லாத உள்ளூர் மக்களுக்கு அடுத்த இரு நாட்களில் உதவ முடிவு செய்து உள்ளோம். தற்போது, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது" என தெரிவித்தார்.
என்ன பொருட்கள்?
மேலும், "பொருட்கள் வீடு, வீடாக கொண்டு சேர்க்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் சோப்பு வழங்கப்படும்" எனவும் அவரது உதவியாளர் தெரிவித்தார்.
பாதி சம்பளம்
முன்னதாக மஷ்ராபே மொர்டாசா கிரிக்கெட் வீரராக தான் பெறும் சம்பளத்தில் பாதியை கொரோனா பாதிப்பிற்கு வழங்கி இருந்தார். அவர் மட்டுமின்றி 26 வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கி இருந்தனர்.
கங்குலி, சச்சின் உதவி
இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். கங்குலி, மேற்கு வங்காளத்தில் 50 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை வழங்கினார். சச்சின் 50 லட்சம் வழங்கினார். சில மாநில கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் இடங்களை கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் மையங்களாக வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளன.
கௌதம் கம்பீர் நிதி
கௌதம் கம்பீர் டெல்லி அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் நிதி உதவி அளித்தார். இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் 4,000 முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தினாலும், பொருளாதாரம் சீரடைய சில மாதங்களாவது ஆகலாம்.