கொல்கத்தா: ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
10-வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 32வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் சாம்சன் 38 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 60 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டும் எடுத்தது.
கொல்கத்தாவின் கூல்டர் நைல் 4 ஓவரில் 34 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் பின்னர் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சுனில் நரேன், கவும் கம்பீர் ஆட்டத்தை துவக்கினர். சுனில் நரேன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து கம்பீருடன் இணைந்தார் உத்தப்பா. இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.
இருவரும் அதிரடி காட்டியதால், கொல்கத்தா அணி 16.2 ஓவர்களிலேயே 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா அதிரடியாக விளையாடி 33 பந்தில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடித்து 59 ரன்கள் குவித்தார். கம்பீர் 52 பந்தில் 11 பவுண்டரிகள் விளாசி 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா, 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.