மாறிய நிலைமை
இந்திய ஒருநாள் அணியில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய அம்பதி ராயுடு தான் சரியான வீரர் என நியூசிலாந்து தொடர் வரை இருந்த நிலை ஆஸ்திரேலிய தொடரில் மாறி விட்டது.
பார்ம் இழந்தார்
ஆஸ்திரேலிய தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்த அம்பதி ராயுடு கடைசி மூன்று போட்டிகளில் நீக்கப்பட்டார். இதனால், அவர் பார்ம் இழந்து விட்டார். இனி அவருக்கு அணியில் இடம் இல்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
ராயுடு தான் சரி
இதனால் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய யார் சரியான வீரர் என முன்னாள் ஆஸி. வீரர் மேத்யூ ஹெய்டனிடம் கேட்ட போது, ராயுடு தான் சரியான வீரர் என்ற அவர், நச்சென்று தன் கருத்தை கூறி இருக்கிறார்.
எதையாவது பேசணும்னு..
"இந்தியாவில் அம்பதி ராயுடு இடத்தை கேள்வி கேட்பதை என்னால் நம்ப முடியவில்லை. நீண்ட காலமாக அவர் நன்றாக ஆடி வருகிறார். இப்போது ஏன் கேள்வி கேட்கிறார்கள் என்பதே எனக்கு புரியவில்லை. ஒருவேளை உலகக்கோப்பைக்கு முன் எதையாவது பேச வேண்டும் என பேசுகிறீர்களோ, என்னவோ!!" என சாடிய ஹெய்டன் ராகுல் குறித்தும் கூறினார்.
ராகுல் சரியானவர் அல்ல
ராகுல் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரரா என்ற பேச்சும் உள்ளது. அது குறித்து பேசிய ஹெய்டன், "ராகுல் அந்த இடத்திற்கு சரியானவர் அல்ல. அவருக்கான நேரம் வரும். அவர் மாற்று துவக்க வீரர் தானே, தவிர நான்காவது இடத்திற்கு அல்ல" என கூறினார்.
ராயுடு பார்ம் அவுட்டா?
உண்மையில், அம்பதி ராயுடு ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர் வரை நல்ல நிலையில் ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சரியாக ஆடாததை வைத்து அவர் பார்ம் அவுட் என கூறுவதை தான் விமர்சித்துள்ளார் மேத்யூ ஹெய்டன்.