ஆர்சிபி -கேகேஆர்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய தினம் இரு போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. முதலில் சென்னையில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலும் அடுத்ததாக மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலும் போட்டிகள் நடைபெறுகிறது.
205 ரன்கள் இலக்கு
சென்னையில் தற்போது ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 205 ரன்களை இலக்காக கொண்டு கேகேஆர் தற்போது ஆடி வருகிறது.
25 ரன்களை அடித்த படிக்கல்
ஆர்சிபியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து விளையாட வந்த பட்டிதாரும் 1 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் படிக்கல் 25 ரன்களை அடித்திருந்தார்.
150 ரன்களை குவித்த வீரர்கள்
அடுத்து நடந்ததுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட். தொடர்ந்து விளையாட வந்த க்ளென் மாக்ஸ்வெல் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஏபி டீ வில்லியர்சும் கலக்கலான ஆட்டத்தை ஆடினார். இருவரும் இணைந்து 150 ரன்களை குவித்திருந்தனர்.
பொய்யாக்காத வீரர்
க்ளென் மாக்ஸ்வெல் கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் இந்த சீசனில் அவரை நம்பிக்கையுடன் ஏலத்தில் எடுத்த ஆர்சிபியின் நம்பிக்கையை அவர் பொய்யாக்கவில்லை. அவர் தொடர்ந்து 3 போட்டிகளிலும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய போட்டியில் 49 பந்துகளில் 78 ரன்களை குவித்துள்ளார்.
74 ரன்களை குவித்த டீ வில்லியர்ஸ்
இதேபோல ஆர்சிபியின் நட்சத்திர வீரர் ஏபி டீ வில்லியர்சும் இன்றைய போட்டியில் அவுட்டாகாமல் 34 பந்துகளில் 74 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்கள் அடக்கம். இதே போல மாக்ஸ்வெல்லும் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ்களை அடித்திருந்தார். மொத்தத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் இவர்களின் ஆட்டத்தின்போது பொறி பறந்தது. இதையடுத்து ஆரஞ்சு கோப்பைக்கான பட்டியலில் முதல் 5 இடங்களுக்கு இவர்கள் முன்னேறியுள்ளனர்.