வெறும் 59 ரன்கள்
குட்டி சேவாக் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மாயங் அகர்வாலை இந்திய டெஸ்ட் அணியில் பிசிசிஐ மாற்று வீரராக சேர்த்துள்ளது. மாயங் அகர்வால் கடைசியாக இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் மார்ச் மாதம் விளையாடினார். இதில் 2 டெஸ்ட் போட்டியையும் சேர்த்து 59 ரன்கள் அடித்தார். இதில் அவருடைய சராசரி வெறும் 19 தான்.
ஐபிஎல் சொதப்பல்
இதே போன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட மாயங் அகர்வால் வெறும் 196 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் அவரது சராசரி வெறும் 16 தான். இதனால், மாயங் அகர்வால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கர்நாடக அணிக்காக ரஞ்சி போட்டியிலும் மாயங் அகர்வால் கடைசியாக விளையாடினார்.
வாழ்க்கை சக்கரம்
ஆனால், ராகுலுக்கு காயம் ஏற்பட்டு, ரோகித் சர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால் தற்போது மாயங் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாயங் அகர்வால் தான் இந்திய அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுலுக்கு அந்த வாய்ப்பு போனது. தற்போது அதே போல ஒரு நிகழ்வு ஏற்பட மீண்டும் மாயங் அகர்வாலுக்கு கதவு திறந்துள்ளது.
மாற்றப்பட்ட விதிகள்
மாயங் அகர்வாலுக்கு, குவாரண்டைன் விதிகள் தேவையில்லை என்ற விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாயங் அகர்வாலுக்கு அளிக்கப்பட்ட கேப்டன் பதவியால் தான், அவருடைய பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீண்டு வருவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.