ஒரே அணியில் இருவர்
கர்நாடகா மாநில அணியில் ஒன்றாக ஆடிய அவர்கள் இந்திய அணியிலும் நண்பர்களாக வலம் வருகின்றனர். அதே போல, ஒரே ஐபிஎல் அணியிலும் இடம் பெற்றுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்றுள்ளனர்.
முன்னணி வீரர் கேஎல் ராகுல்
கேஎல் ராகுல் இந்திய அணியில் கடந்த நான்கு வருடங்களாக இடம் பெற்று வருகிறார். சமீபத்தில் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவும் மாறி உள்ளார். துவக்க வீரர், மிடில் ஆர்டர் என எந்த இடத்திலும் பேட்டிங் செய்து வருவதால் அணியில் முக்கிய வீரராக மாறி வருகிறார்.
டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால் 2018இல் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து டெஸ்ட் அணி துவக்க வீரராக தன் பெயரை பதித்து வருகிறார். ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றாலும் அதில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
ஐபிஎல் இல்லை
இருவரும் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுன் அமலில் உள்ளதால் இருவரும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
நேரலை உரையாடல்
சமீபத்தில் இருவரும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் முன்பு நேரலையில் உரையாடினர். அப்போது மயங்க் அகர்வால், ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தான் சிக்ஸ் அடித்த போது அதே அணியை சேர்ந்த ராகுல் கடும் கோபம் கொண்டதை குறிப்பிட்டார்.
ராகுலின் கோபம்
மேலும், களத்தில் சாதாரணமாகவே கோபம் அடையும் கேஎல் ராகுல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆனால் என்ன செய்வார்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார் மயங்க் அகர்வால். ஆம், ராகுல் 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
கேப்டனாக வந்தால்..
ராகுல் கோபப்படுவது பற்றி அவரிடமே கூறிய மயங்க் அகர்வால் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை ரசிகர்கள் முன் வெட்ட வெளிச்சமாக கூறினார். "இந்த ஆண்டு உன்னை அணியின் கேப்டனாக சந்திக்க காத்திருக்கிறேன். களத்தில் சும்மாவே கோபம் வரும். இப்போது கேப்டனாக எப்படி நடந்து கொள்வாய் என தெரியவில்லை" என்றார் மயங்க்.
சிக்ஸ் அடித்த மயங்க்
அதற்கு பதில் அளித்த கேஎல் ராகுல், "நீ களத்தில் ஏதாவது முட்டாள்தனமாக செய்தால் மட்டும் தான் நான் உன்னிடம் கோபப்படுவேன்" என்றார். அப்போது மயங்க், "நான் முகமது நபி பந்துவீச்சில் சிக்ஸ் அடித்தேன். அடுத்து என்ன திட்டம் என தெரிந்து கொள்ள உன்னிடம் வந்தேன். அப்போது நீ என்னை கடுமையாக திட்டினாய்? அது என்ன?" என திருப்பி கேட்டார்.
முட்டாள்தனமான கிரிக்கெட்
"அது முட்டாள்தனமான கிரிக்கெட். நீ சிக்ஸ் அடித்தது எனக்கு புரிந்தது. ஆனால், அது ரிஸ்க்கான ஷாட். நாம் 190 ரன்களை சேஸிங் செய்யவில்லை. 140 ரன்களை தான் சேஸிங் செய்தோம். அப்போது நாம் விக்கெட் இழக்கக் கூடாது என நான் நினைத்தேன்" என்றார் ராகுல்.
ஃபோர் அடி என்றேன்
மேலும், "அந்த ஓவருக்கு முன்பு நான் உன்னிடம் தெளிவாக கூறினேன், அடித்து ஆட வேண்டும் என்றால் ஃபோர் அடி என்று. அதை தான் ஐந்து வினாடிகள் முன்பு தான் கூறினேன். ஆனால், நீ முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தாய். அது கிளியரான சிக்ஸும் இல்லை. விஜய் ஷங்கர் சரியான லைனில் இருந்திருந்தால் கேட்ச் பிடித்து இருப்பார்" என்றார் ராகுல்.