வித்தியாசமான உணவு
அதாவது அவரே தன்னை சமையல் கலை நிபுணர் என கூறிக் கொண்டு வித்தியாசமான உணவு ஒன்றை தயார் செய்துள்ளார். அதன் பெயர் தான் ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா (Quinoa). கிரிக்கெட் பேட் பிடித்த கை சும்மா இருக்குமா?
ட்விட்டரில் புகைப்படம்
அதான் நாம் கேள்விப்படாத ஒரு ஐட்டத்தை செய்து காட்டி இருக்கிறார். அவர் இது பற்றி ட்விட்டரில் அந்த உணவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழ் இரவு உணவுக்கு ஆரோக்கியமான உணவை செய்துள்ளதாக கூறி இருக்கிறார்.
|
அட கோதுமை உப்புமா!
அந்த படத்தை பார்த்தவுடன், "அட கோதுமை உப்புமா தானே இது.. லாக்டவுன் நேரத்துல எங்க வீட்டுலயும் இது தான் தம்பி செஞ்சிருக்கோம்" என சொல்லத் தோன்றுகிறதா? நமக்கும் அதே தான் தோன்றியது. அப்புறம் தான் மஷ்ரூம்னா காளான் தானே.. அதை எதுக்கு கோதுமை உப்புமால.. என சிந்தித்தோம்.
ஆராய்ச்சி செய்ததில்..
அது என்ன ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா, லாக்டவுன்ல சும்மா தானே இருக்கோம் செஞ்சு பார்ப்போமே என கூகுளில் போட்டு ஆராய்ச்சி செய்ததில் நமக்கு கிடைத்த விவரம் இதுதான். ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா என்பதை "கீரை காளான் சீமைத்தினை" என ஓரளவு மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
சீமைத்தினை கிடைக்கலைன்னா..
ஸ்பினாச் என்றால் கீரை என நாம் கூறி விட்டாலும் சிலர் பசலைக் கீரை தான் ஸ்பினாச் என வம்பு செய்கிறார்கள். காளான் பற்றி சொல்லத் தேவையில்லை. கீன்வா என்பது சீமைத்தினை ஆகும். இது கிடைக்கவில்லை என்றால் தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நமக்கு நாமே ஒரு முடிவு எடுத்துக் கொண்டோம்.
தேவையான பொருட்கள்
இந்த மூன்று தவிர தேவையான பொருட்கள் வெள்ளைப் பூண்டு, வெங்காயம், எண்ணெய், உப்பு மட்டுமே. பல ரெசிபிக்களையும் ஆராய்ந்ததில் இதை அப்படியே கிச்சடி செய்வது போல செய்யலாமாம். முதலில் எண்ணெய், காளான், பூண்டு, உப்பு போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
உப்புமா ரெடி
அடுத்து கீரை இலைகள் வதங்கும் வரை காத்திருந்து பின் வேக வைத்த தினையை சேர்த்து கிண்ட வேண்டும். தேவை என்றால் மேலே லேசாக எண்ணெய் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான்.. நம்ம தினை உப்புமா ரெடி.. இது.. ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா ரெடி!
லத்தி அடி வாங்காமல்…
பின் குறிப்பு : மேலே சொல்லி உள்ள தேவையான பொருட்களில் எப்படியும் பலர் வீட்டில் கீரை, காளான், தினை இருக்காது. பக்கத்து மளிகை கடையில் மாலை ஆறு மணிக்கு மேல் லத்தி அடி வாங்காமல் தினை, காளான் வாங்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி
மளிகைக் கடையில் கீரை கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் வீட்டை சுற்றி இருக்கும் மண் இடங்களில் புற்களுக்கு நடுவே எது கீரை என கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளவும். அல்லது கொத்தமல்லியை கீரை என நினைத்துக் கொள்ளலாம். (இதுக்கு மயங்க் அகர்வால் சும்மாவே இருந்திருக்கலாம். நம்ம ஆசையை வேற தூண்டி விட்டு..)