மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார்.
அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான்.
இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ.,) நிர்வாக கமிட்டி அவசரமாக கூடி, ஐந்து ஆண்டுகள் ஷாருக்கான் வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதித்தது.
இதனால், இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அவரது அணி வான்கடே மைதானத்தில் ஆடிய ஆட்டங்களை அவரால் நேரில் காண இயலவில்லை.
இந்நிலையில், இன்று மும்பை கிரிக்கெட் சங்கம் ஷாரூக்கானிற்கு விதிக்கப் பட்ட தடையை விலக்கிக் கொண்டுள்ளது. இனி ஷாரூக் வான்கடே நுழைய தடை ஏதுமில்லை.