கவாஸ்கருக்கு இருக்கைகள் ஒதுக்கீடு
கடந்த 1987ல் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது அவருக்காகவும் அவரது மனைவிக்காகவும் மும்பை வான்கடே மைதானத்தில் நிரந்தரமாக இரு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. இந்திய அணியில் அவரது பங்களிப்பை போற்றும்வகையில் இந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
ஒதுக்கப்படாத இருக்கைகள்
இந்நிலையில் கடந்த 2011ல் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக மும்பை வான்கடே ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டது. அதையடுத்து கவாஸ்கருக்கு மீண்டும் அந்த இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த இருக்கைகளை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கம் ஒதுக்கியுள்ளது.
மீண்டும் ஒதுக்கப்பட்ட இருக்கைகள்
கவாஸ்கர் தன்னுடைய 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு நேற்று இந்த இருக்கைகள் மீண்டும் ஒதுக்கித்தர மும்பை கிரிக்கெட் சங்க கவுன்சில் உறுப்பினர் நதிம் மேமன் கோரிக்கையையடுத்து தற்போது மீண்டும் இந்த இருக்கைகளை ஒதுக்கியுள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
இதுமட்டுமின்றி வான்கடே மைதானத்தின் பிரசிடெண்ட் பாக்சிலும் அவர்கள் இருவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இருக்கைகள் முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் விஜய் பாட்டீல் தலைமையிலான குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது.