அக்டோபர் -நவம்பரில் திட்டம்
கடந்த மாதம் 21ம் தேதி துவங்கி கடந்த 8ம் தேதி நிறைவடைந்த மகளிர் டி20 உலக கோப்பையை சிறப்பான அளவில் நடத்தி முடித்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆண்கள் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பீதி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை சர்வதேச அளவில் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக மக்கள் அனைவரையும் பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் அனைத்து வகையான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை இது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 15ல் இறுதிப்போட்டி
வரும் அக்டோபர் 18 முதல் 23ம் தேதி வரை தகுதி சுற்றுகளும் தொடர்ந்து 24ம் தேதி முதல் 12 அணிகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகளும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நடைபெறவுள்ளது. இதன் இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மகளிர் இறுதிப்போட்டிக்கு 86,000 பேர் கூடிய நிலையில், இந்தப் போட்டிக்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை
இந்நிலையில் கொரோனா பீதி எல்லாம் ஓய்ந்து, திட்டமிட்டபடி இந்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில வாரங்களில் அனைத்து வகையான போட்டிகளும் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சாதாரண நிலைக்கு திரும்புவோம்
கொரோனா பீதியெல்லாம் நீங்கி, டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு சாதாரண நிலைக்கு திரும்புவோம் என்றும் கெவின் கூறியுள்ளார். எதுவும் நம் கையில் இல்லை என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.