நவீன கிரிக்கெட் குறித்து கருத்து
முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் சிறப்பான லெக் ஸ்பின்னராக திகழ்ந்தவர். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முறையே 800 மற்றும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். தன்னுடைய கேரியரில் பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். சர்வதேச போட்டிகளில் சிறந்த பௌலராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
நெருக்கடியை சமாளிக்க மனவளம்
தொழில்முறை திறமையை காட்டிலும் மனவளத்தை பேணுவதில் வீரர்கள் சிறந்த கவனம் செலுத்த வேண்டும் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள்கூட சமயத்தில் தங்களின் மனவளத்தை காக்கத் தவறுவதால் நெருக்கடி நேரங்களில் செயல்பட வேண்டிய செயல்முறைகள் அவர்களுக்கு தெரிவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விளையாட்டிற்கு முக்கியம்
ஸ்டார் ஸ்போர்ட்சில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முத்தையா முரளிதரன், வீரர்கள் 90 சதவிகிதம் மனவளத்துடன் இருந்தால் மட்டுமே எந்த விளையாட்டையும் ஆட முடியும். இளவயதில் ஆட்டத்தில் நமக்கு விருப்பம் அதிகமாக இருப்பதால் இதுகுறித்த அறிவு நமக்கு இருப்பதில்லை என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார். தொழில்முறையில் நாம் ஆடும்போது நெருக்கடி காரணமாக மனவளத்திற்கு நாம் முக்கியத்துவம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விளையாட்டிற்கும் பொருந்தும்
விளையாட்டு குறித்த நல்ல புரிதல் காணப்படும் வீரர்கள்கூட மனவளத்தில் கவனம் செலுத்தாமல், அந்த ஆட்டத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது கிரிக்கெட்டிற்கு மட்டுமின்றி அனைத்து விளையாட்டுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மனவளத்தை பயிற்சி செய்வது மிகவும் கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
விட்டுக் கொடுக்கக் கூடாது
தங்களுடைய மன நெருக்கடிகளை வெளிப்படையாக தெரிவிக்கும் சூழல் வீரர்களுக்கு இருக்க வேண்டும் என்று சமீபத்தில் வங்கதேச கோச் ரசல் டாமிங்கோ தெரிவித்திருந்தார். மனவளம் குறித்து விராட் கோலி உள்ளிட்டவர்களும் அடிக்கடி தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில், தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும்போது விட்டுக் கொடுக்காமல் பயிற்சி செய்ய வேண்டும என்றும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை கைவிடாமல் முயற்சித்தால் வெற்றி நிச்சயம் கைவசப்படும் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.